அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுகமாக கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது. அது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நமது நாட்டில் அரசியல் வாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒருவர் மீது ரூ.50 கோடியும், ஒருவரது மகன் மீது 250 கோடியும், வேறு ஒருவர் மகள் மீது 500 கோடியும், ஒருவரது மருமகன் மீது 1000 கோடியும், ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
பேச்சின் இடையே கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பி அதற்கு பதிலும் பெற்றார். நாடு ஏமாற்றம் அளிக்க வில்லையா? என அவர் கேட்டதற்கு கூட்டத்தினர் ‘ஆமாம்’ என பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக கோபம் வரவில்லையா? என கேட்டார். அதற்கும் ஆமாம் என மக்கள் பதில் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மக்களை பார்த்து ‘‘நான் உங்கள் முன்பு நிற்கிறேன். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதா? பதில் சொல்லுங்கள் என்றார்.
அதற்கு மக்கள் இல்லை என பலத்த சத்தத்துடன் கூறினர். அதன் பின்னர் அவர் கூட்டத்தினரை பா ர்த்து எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்காக உழைக்கிறேன். நாட்டுக்காகவே வாழ்ந்து உயிர் துறப்பேன் என்று கூறினார் பிரதமர் மோடி.


