அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசியபோது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுக தாக்குதலை தொடுத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது. அது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நமது நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒருவர் மீது ரூ.50 கோடியும், ஒருவரது மகன் மீது 250 கோடியும், வேறு ஒருவர் மகள் மீது 500 கோடியும், ஒருவரது மருமகன் மீது 1000 கோடியும், ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன என மோடி குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி, அன்னிய மண்ணில் இருந்துகொண்டு சொந்த நாட்டினரைப் பற்றி தரக்குறைவாக பேசும் மோடியின் நடவடிக்கையை அவமானகரமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் கலிபோர்னியாவுக்கு சென்று தனது சொந்த நாட்டு மக்களை கிண்டல் அடித்தும், தன்னைப்பற்றி தற்புகழ்ச்சியாக பெருமையடித்துக் கொள்வதையும் கேட்கவே அவமானமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


