நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தியதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் 14 பேரை வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்காக தடை விதித்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதேபோல, நீதித்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை காலி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என்றால், சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரை வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பி, ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள்.
ஆனால், இன்று நடந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தின்போது, இதுபோன்ற ஊர்வலங்கள், கோஷங்கள், போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. 40வழக்கறிஞர்கள் வழக்கம் போல் இன்று கோர்ட்டில் ஆஜராகினார்கள். பல வழக்கறிஞர்கள், ‘அங்கி’ அணியாமல், கோர்ட்டுக்கு சென்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நீதிமன்ற அறையில், சண்முகம் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மனுதாரர் ஆஜராகி, தன் வழக்கறிஞர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர் ஆஜராகவில்லை என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, நீங்கள் வாதாடுவதாக இருந்தால், வாதாடலாம் என்றார். அதை ஏற்று மனுதாரர் தன்னுடைய வழக்கு குறித்த விவரங்களை எடுத்துக்கூறி வாதிட்டார்.
இதையடுத்து, அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள். இதற்கிடையில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜாகோபால் ஆஜராகி, ‘திருச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் உறுப்பினர்கள் 4 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பார் கவுன்சிலின், உறுப்பினர்கள் இப்படி கலந்துக் கொள்வதால், தவறு செய்யும் வழக்கறிஞர் மீது எப்படி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்? எனவே, இந்த 4 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலை கலைக்கவேண்டும்’ என்றார். இதற்கு நீதிபதிகள், பொருத்திருந்து பார்க்கலாம்’ என்று கூறினார்கள்.
மொத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வழக்கம்போல் செயல்பட்டது. வழக்கறிஞர்களின் போராட்டத்தினால், வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.
இதற்கிடையில், ‘சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘எங்களது போரட்டம் அகில இந்திய பார் கவுன் சில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதான் நடத்து கின்றோம். மதுரை வழக்கறிஞர்கள் மீது இடைக்கால தொழில் செய்ய தடை விதித்தது தவறு. அவர்களுக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்து, விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி, அதன்பின்னர்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், நேரடியாக அவர்களை தொழில் செய்ய தடை விதித்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிபதிகளும், வழக்கறிஞராக பணியாற்றிய பின்னரே, அந்த பதவியை பெற்றுள்ளனர்.
நாங்கள் நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வில்லை. மதுரை வழக்கறிஞர்கள் மீதான தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்’ என கூறினார்.


