தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வத்தலக்குண்டு மணப்புரம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போவில் கிளீனிங் வேலை செய்வதற்கான கான்ட்ராக்டை அதே டெப்போவில் காவலாளியை பணியாற்றி வரும் ஒருவர்தான் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகனும் அவரது நண்பரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளீனராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு டெப்போவில் தனி அறைகள் உள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் உள்ள மணப்புரம் தங்க நகைக்கடன் நிறுவனத்தில் கடந்த 22ஆம் தேதி முகமூடி கொள்ளையர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, ரூ.17 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பகல் நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்து விட்டு, இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் செயலில் கிளீனர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக பணியாற்றி வந்த முருகனையும், அவரது நண்பரையும் திண்டுக்கல் காவல்துறையினர் நேற்றிரவு திடீரென கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறைகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இரண்டு பேரையும் திண்டுக்கல் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


