வெளிநாடு சென்ற பிரதமர் மோடி இந்தியா வருகிறார்

Published:

ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த இந்தியதனது ஏழுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வருவதற்காக புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி, டப்ளின் நகரில் அந்நாட்டு அதிபர் எண்டா கென்னியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர், 23-ம் தேதி நியூயார்க் நகருக்கு வந்த அவர் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், புவி வெப்பமாயதல், உலகஅமைதி, தீவிராவாத ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் சுமார் 500 பேருக்கு விருந்து அளித்த மோடி, இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தொழிற்சாலைக்கு சென்ற அவர் அங்கு புகை வெளியிடாதபடி பேட்டரியால் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர், சிலிக்கான் வேல்லி பகுதி என அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் நகருக்கு சென்று பேஸ்புக் நிறுவனத்தை பார்வையிட்டார். பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்குடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

சான் ஜோஸ் நகரில் சுமார் இருபதாயிரம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், நேற்று நியூயார்க் நகருக்கு திரும்பிய அவர், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

மோடியை பார்த்த ஒபாமா அவரை கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவ நிலை மாற்றத்தை தடுத்தாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரையும் அவர் சந்தித்தார். கத்தார் நாட்டு அமீர், ஷேக் தமின் பின் ஹமாத் அல் தானி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியாட்டோ ஆகியோரையும் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு தனது தனி விமானம் மூலம் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

விமானத்தில் ஏறி புறப்படும்போது, தனது அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு சந்திப்புகளின் விளைவாக இந்தியாவுக்கு ஆதாயமான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதாகவும், தனக்கும், தன்னுடன் வந்திருந்த குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img