தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
இதுவும் ஒரு 110 அறிவிப்பு. ‘‘மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பத்துலட்சம் கடன் கொடுக்கப்படும். அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்’’ என்று 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்னும் அது நிறைவேறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாதவர், ஆட்சி போகும் நிலையில் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார்?
தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது மகளிர் சுயஉதவிக் குழுக்களை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கைபேசி என்று அறிவிக்கிறார். தேர்தல் நாடகத்தை தொடங்கி விட்டார். இனி எஞ்சியிருக்கின்ற நாட்களில் இது போன்ற அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது.
சட்டமன்றத்திற்கு அரை மணி நேரம் வரும் ஜெயலலிதா தேர்தல் அறிவிப்புகளை வெளியிடத்தான் வருகிறார். ஏற்கனவே மாநில நிதி நிலைமை மோசம். 2.11 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கிறது. நிதி நிலைமை பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா 110 அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இதுவரை அவர் அறிவித்த பல அறிவிப்புகள் ‘‘வெற்று அறிவிப்புகளாகவே’’ கடந்துபோயிருக்கின்றன. இந்த அறிவிப்பும் கடந்து போகும்.
1989-ல் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கியது தி.மு.க. அரசு. அவர்களுக்கு கடன் கொடுத்தால் தானே கைபேசி பயன்படுத்த முடியும். முதலில் சுயஉதவிக் குழுக்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி கடன் கொடுக்கட்டும். பிறகு கைபேசி கொடுக்கலாம் என மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளர்.


