மோடி ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே : கி.வீரமணி
கோவை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:–
பெரியார் பதவி ஆசை இல்லாமல் 95 வருட காலம் தொண்டாற்றினார். பாட்டாளி, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்தார். ஜாதியை ஒழிக்க பாடுபட்டார். பெரியாரின் சிந்தனை புரட்சியால் தான் காவல் துறையில் பெண்கள் பலர் உயரதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் பல மாற்றங்கள் நிகழும் என மக்கள் நினைத்தனர். ஆனால் மாற்றத்துக்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து தமிழகமுதலமைச்சர் பல முறை கடிதம் எழுதியும், கடிதம் மத்திய அரசிடம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேபாளம் நாடு மதசார்பற்ற நாடு என அறிவித்ததும், மோடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார். ஆனால், இலங்கை தமிழர் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை.இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் ஐ.நா. மன்றம் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என அறிவித்தது. பன்னாட்டு விசாரணையில் மட்டுமே ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.
தற்போது, முதலாளித்துவம் கொண்ட அமெரிக்க நாடு இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதும் என தீர்மானம் நிறைவேற்றுவது கண்டனத்திற்குரியது என அவர் பேசினார்.


