கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து தனது இரு தங்கைகளையும் சுட்டுக்கொன்ற வாலிபர் தலைமறைவாகிவிட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட லாகூர் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 41-வது வடக்கு சவுக் பகுதியை சேர்ந்த வாலிபரான உமர் ஹயாத் என்பவர், தனது இரு தங்கைகளும் அதேபகுதியை சேர்ந்த இரு வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து அடிக்கடி அவர்களை அடித்து, உதைத்து தகராறு செய்துவந்தார்.
நேற்றும் இதுதொடர்பாக தனது தங்கைகளுடன் வாக்குவாதம் செய்த அவர், தனது குடும்ப கவுரவத்தை அந்த இரு பெண்களும் சீர்குலைத்து வருவதாக குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை இரு தங்கைகளுமே மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த உமர் ஹயாத், அந்த இரு பெண்களையும் துப்பாக்கியால் துடிதுடிக்க சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி, தலைமறைவாகினார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இரு பிரேதங்களையும் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கவுரவக்கொலை என்ற குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


