இலங்கை தமிழர்கள் கொலை செய்ய காரணமன காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க கட்சிகள் தான் குற்றவாளிகள் : வைகோ

Published:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நாளைய தினம் தமிழ் இனத்துக்கு துக்க நாள். தமிழர்களின் தலையில் இடி விழும் துயர நாள். தமிழர்களின் சரித்திரத்தில் மாறாத கறுப்பு நாள். இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் ஐக்கிய நாடு சபை வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டது. நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம் சாட்டவில்லை. மனித உரிமை அமைப்புகளை குற்றம் சுமத்தவில்லை. அதில் உள்ள உறுப்பு நாடுகளை தான் குற்றம் சொல்கிறேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமர் தலைமையிலான மூவர் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி விரிவான அறிக்கை வெளியிட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட படுகொலைகள், இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடசேன் போன்றவர்கள் படுகொலைகள், 8 தமிழர்களை நிர்வாணமாக்கி கொலை, லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை, மருந்து, உணவின்றி தமிழர்கள் கொலை என அனைத்தையும் பட்டியலிட்டு இதுதொடர்பாக வெளிநாட்டு நீதிவிசாரணை தேவை என அறிக்கையில் கூறியிருந்தனர். மனித உரிமை ஆணையரும் தனது அறிக்கையில் இது குறித்து விரிவாக கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கே, மங்கள சமரவீரா ஆகியோர் தயாரித்து கொடுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு இந்த தீர்மானத்தில் இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திருத்தப்பட்ட தீர்மானத்தில் ராணுவம் தொடர்பான 3 பாராக்கள் நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விசாரணை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த தீர்மானம் விடுதலை புலிகளை மட்டும் விசாரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

2009–ல் கியூபாவும், இந்தியாவும் ஐ.நா.சபையில் இலங்கையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தது. அதே நிலைமை தான் தற்போதும் உள்ளது. நாளை கொண்டு வரும் தீர்மானத்தால் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. இந்திய அரசு தற்போது இப்பிரச்சினையில் நடுநிலை வகிக்க போவதாக கபட நாடகம் ஆடுகிறது. ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி போரை நடத்தியது. இந்த கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. ஆகியவை குற்றவாளிகள் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க 10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள். நமது பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே உறுதியோடு போராடுவோம் என வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img