பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கடந்த 21–ந்தேதி மும்பையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டு அனுமதியுடன் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். சென்னை ஓட்டலில் தங்கி இருந்தபோது தன்னை கூட்டாளிகள் சந்தித்ததாக அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்தார்.
இந்த சந்திப்பின்போது உடன் இருந்த கூட்டாளிகளில் ஒருவரான பிரவீன், 2013 ஏப்ரல் 4–ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமீன் பெற்று மதுரையில் வசித்து வருகிறார். அட்டாக் பாண்டி வாக்குமூலம் உண்மை தானா என்பது குறித்து தற்போது பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணை அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது அட்டாக் பாண்டியும், பிரவீனும் சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை.
பிரவீனை தொடர்ந்து மற்ற கூட்டாளிகளிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கூட்டாளிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றபோதிலும், தற்போது அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்க உள்ளதால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் நம்புகிறார்கள்.