டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் : வழக்கறிஞர் மாளவியா

Published:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இரண்டு வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செங்கோடு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி கணேசமூர்த்தி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும், விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு இரண்டையும் நாமக்கல் நீதிமன்றத்திற்க்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை ஏற்று இந்த வழக்குகள் நாமக்கல் நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பான ஆவணங்களை சி.பி.சி. ஐ.டி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம், 2 செல்போன்கள், கையடக்க கணினி, மடிக்கணினி ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடர்பாக சி.பி.சி. ஐ.டி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கோகுல் ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு அகிய இரண்டிலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக அவரது செல்போன் எண்ணை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். அவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியவர்கள் யார் – யார், என்ற பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அவர்கள் அனை வரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாகர் கோவிலைச் சேர்ந்த மதுரை நீதிமன்ற, வழக்கறிஞர் மாளவியா என்பவரும் விஷ்ணுபிரியாவிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருக்கிறார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாளவியாவை விசாரணைக்காக அழைத்திருந்தனர். விஷ்ணுபிரியாவின் நண்பரான மாளவியாவிடம் சேலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இது பற்றி வழக்கறிஞர் மாளவியா கூறயதாவது:–

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, பல்வேறு வழக்குகள் தொடர்பான பலமுறை என்னை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உயர் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், பொய் வழக்கு போடச் சொல்லி வற்புறுத்துவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

இந்த துறைக்கு வந்து எதனை செய்யக்கூடாது என்று நினைத்தேனோ, அதையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது என்றும் விஷ்ணுபிரியா கூறினார்.

கோகுல் ராஜ் விடுதலை வழக்கு மட்டுமின்றி, குமாரபாளையம் ஜெகநாதன் கொலை வழக்கிலும் தனக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் விஷ்ணுபிரியா தெரிவித்தார். இதுதவிர மாதம் தோறும் பணம் வசூல் செய்து கொடுக்கவும் சொல்லியும் விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலமாக பண வசூல் செய்ய வேண்டும் என்றும், விஷ்ணுபிரியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சினைகளே அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகும். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கை திசை திருப்பினால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளோம் என வழக்கறிஞர் மாளவியா சி.பி.சி.ஐ.டி. போலீஸியிடம் கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img