திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தொப்பம்பட்டி வாகரையில் தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். கூடுதல் நேரம் வேலை செய்யும் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போதிய வசதி செய்து கொடுக்காமல் கொத்தடிமை போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அங்கு வேலை செய்த அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த இளைஞர்கள் ரவீந்திரர் (வயது 25), ஸ்ரீராம் (19), மோகன்லால் (20) ஆகியோர் தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கி தொகை ரூ.16 ஆயிரத்தை கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மில் நிர்வாகத்தினர் அந்த இளைஞர்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வெளியே தள்ளியுள்ளனர். காயத்துடன் திருப்பூர் சென்று அங்கு வேலை செய்யும் உறவினர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் பழனிக்கு அழைத்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மில் நிர்வாகத்தினரின் அராஜகம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.