ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா மதில் சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பொய்யை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் புகாராக அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த புகாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா, அப்படி எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட இந்தியா திட்டமிடவில்லை. சர்வதேச எல்லைக்கோட்டுப்பகுதி அமைந்துள்ள நிலபரப்பின் அடிப்படையில் அங்கு மதில் சுவர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை.
இது பாகிஸ்தானுக்கும் நன்றாக தெரியும். இருந்தும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் தேவையில்லாத, ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள முள்வேலிகள் சிதிலமடைந்து போய் உள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. மழையினால் வெள்ளம் ஏற்படும்போது சிதிலமடைந்த முள்வேலி வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்காக வேலிகளை சீரமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.


