மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து புதைத்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதன்பேரில் மேலூரை அடுத்த சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடை இடு காட்டு பகுதியில் தோண்டி பார்க்க சகாயம் உத்தர விட்டார்.
அதன்படி தோண்டப்பட்ட குழியில் இருந்து 8 எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நரபலி புகாரின் அடிப்படையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவன் ஆகியோருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 15, 16 மற்றும் 17–ந்தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இதற்கிடையில் நரபலி புகார் கூறிய சேவற்கொடியோனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் 22–ந்தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனங்களில் வேலை பார்த்த லோகேஷ், முருகேசன், ராஜா, தனபால், ஹனுமந்தன், பழனிவேல், முருகானந்தம் அகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் அனுப்பியுள்ள இந்த சம்மனில் நவம்பர் 22–ந்தேதி ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


