தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மதுரை வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது,
இந்த விசாரனையின் போது மதுரை வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜரானார். அவரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகிய இருவரும் இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார். கூடுதல் அமர்வில் பங்குபெறும் நீதிபதிகளின் பெயர்களை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.


