சிகரெட்டை புகைப்பதால், அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிப்பவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பெற்றோரின் புகைப்பழக்கம் குழந்தைகளை பாதிக்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில், காரில் குழந்தை இருக்கும்போது, புகைப்பிடிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு பிடிபடும் இடத்திலேயே ஐம்பது பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றால் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பவுண்ட் (சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்) வரை அபராதம் கொடுக்க வேண்டிவரும் எனவும் தெரியவந்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்தப் பிரச்சனை குற்றமாக கருதப்படாமல் சுற்றுச்சூழலுக்கும், குழந்தைக்கும் பெரியவர்களின் புகைப்பழக்கத்தால் உண்டாகும் பாதிப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர், அறிவுறுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுனரல்லாத பயணி இதுபோல குழந்தை இருக்கும்போது புகைப்பிடித்தாலும், அதுவும் சட்டவிரோதமானது என்றும், இதனை அனுமதிக்கும் ஓட்டுனருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.


