கோவை மாவட்டம் செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் கலைவாணி (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.இவர் நேற்று வீட்டில் விஷ மாத்திரை தின்று மயங்கிக் கிடந்தார். குடும்பத்தினர் கலைவாணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
கலைவாணி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், பேராசிரியை பானு பிரியா வகுப்பறையில் சக மாணவிகள் மத்தியில் வைத்து என்னை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், எனது சாவுக்கு காரணமான பேராசிரியைக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் எனவும் கூறியிருந்தார்.துகுறித்து புகாரின் பேரில் பேராசிரியை பானு பிரியா மீது இந்திய தண்டனை சட்டம் 306–வது (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலைவாணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத்தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். மாணவி கலைவாணி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் பேராசிரியை பானுபிரியா தலைமறைவாகி விட்டார்.இப்பிரச்சினையில் பேராசிரியை மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.போலீசார் அவரை தேடி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரிக்கும் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
“


