அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் அரவிந்த், தனது சக பேராசிரியர் மார்க் பெஸ்க் உடன் இணைந்து வோக்ஸ்வேகன் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளார். அப்போதே, அந்த சாப்ட்வேரின் குளறுபடியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வோக்ஸ்வேகன் காரில் இருந்து வெளியாகும் மாசுபாட்டின் அளவு, ஐரோப்பிய தர நிர்ணயத்தை விட 20 மடங்கு அதிகம் என்பதை, அரவிந்த் வெளிப்படுத்தியுள்ளார்.
‘வோக்ஸ்வேகன்’, அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது.
இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளது.
கார் வெளியிடும் புகையில், காரியத்தின் அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி மென்பொருளை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன் கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.
இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் ‘கார்சினோஜீனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டையாக்ஸைடு’ போன்ற நச்சு வாயுக்கள் உள்ளன. இவை, சிறிய அளவில் காற்றில் கலந்தாலே உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என தற்போது தெரியவந்துள்ளது.
வோக்ஸ்வேகனின் கமர்ஷியல் கார்கள் உட்பட, ஆடி, ஸ்கோடா மற்றும் சீயட் போன்ற கார்களுக்கும் வோக்ஸ்வேகனின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கார்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தமது டீசல் கார்களில் செய்த மோசடியால், பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்சின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது. அந்த கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு எஞ்சின்கள் சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு மென்பொருளோ அல்லது சில பாகங்களோ மாற்றி கொடுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி அம்பலம் ஆனதை அடுத்து ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த சில நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்துள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது போன்ற மிகப்பெரிய மோசடி வோக்ஸ்வேகன் குரூப் நிறுனத்தில் சாத்தியமா என்பதை நினைத்து திகைத்துப்போனேன். வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஒரு புதிய துவக்கம் தேவை. என்னுடைய ராஜினாமா அந்த புதிய தொடக்கத்திற்கு வழி வகுக்கும்” என தெரிவித்துள்ளார்.


