Home Blog Page 5436

தமிழ் தமிழுணர்வு என்று பேசுபவர்களால் ரஜினி காயம்பட்டுள்ளார்: எச். ராஜா

ஈரோடு:

நடிகர் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். அவ்வப்போது பேசவும் செய்தார். அவரது முதல்நாள் பேச்சே அரசியல் கலந்து இருந்தது. இதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது.
அவரது பேச்சை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் அதிகம் பரவின. இதனால் வருத்தமடைந்த ரஜினி, நேற்றைய தமது பேச்சின் போது, வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ், தமிழுணர்வு என்று பேசுபவர்களால் நடிகர் ரஜினிகாந்த் காயம்பட்டுள்ளது தெரியவருகிறது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஸ்டம் கெட்டுப்போனதாக கூறும் ரஜினி, அதனை கெடுத்தது யார் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.

பேஸ்புக் நட்பு விபரீதம்: கல்லூரி மாணவியை மிரட்டி ரூ.8 லட்சம் கறந்த 4 பேர் கைது

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து, அதை வைத்து மிரட்டி ரூ.8 லட்சம் வரை பணம் கறந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, இந்த சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் மாணவிக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தனர். அப்போது, அவரது நிர்வாண படம் தங்களிடம் இருப்பதாகவும், குறித்த இடத்திற்கு வரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவி, அவரது தாயாரிடம் இதுபற்றித் தெரிவித்தார். இதனால் அச்சமடைந்த மாணவியின் தாயார், அந்த நபர்களைத் தொடர்பு கொண்டு, சந்தித்து தனது மகளின் எதிர்காலத்தை பாழாக்கிவிட வேண்டாம் என கெஞ்சி கேட்டுள்ளார். அப்போது, மாணவி ஒரு இளைஞருடன் இருப்பது போன்ற படத்தைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது தாயாரும் பணம் கொடுக்க சம்மதித்தார். இவ்வாறு இரு மாதங்களாக அந்த 3 பேர் கும்பல் ரூ.8 லட்சம் வரை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அந்த நபர்கள் மூவரும் இறுதியாக ரூ.20 லட்சம் தர வேண்டும் எனவும், அதன் பின்னர் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் கூறி மிரட்டியுள்ளது. இதுவரை கொடுத்த பணம் ரூ.8 லட்சமும் மாணவியின் திருமணச் செலவுக்காக வைத்திருந்த சேமிப்பு எனக் கூறி கெஞ்சிய அப்பெண்ணின் தாயார், வேறு வழியின்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில், மிரட்டல் கும்பலை பிடிக்க போலீசார் மாணவியின் தாயாரை வைத்து பணம் தருவதாக பேச வைத்தனர். அந்த கும்பல் அசோக் நகர் பகுதிக்கு வந்ததும், திட்டமிட்டபடி அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்த நபர்களிடம் விசாரணை செய்ததில், பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலனான அமலேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த செய்த சதிச் செயல் இது என்பது தெரியவந்தது.

அமலேஷ், கடந்த ஆண்டு மாணவிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர். கடலூரைச் சேர்ந்த இவர், முதலில் நட்பாகப் பழகினராம். பின்னர் இருவரும் காதலர்கள் ஆகியுள்ளனர். நாளடைவில் அமலேஷின் நடவடிக்கை பிடிக்காததால், இந்த மாணவி அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலேஷ் தனது நண்பர்களான கோகுல், மைக்கேல், ருத்ரா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, மாணவியும், அமலேஷும் சேர்ந்து வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து அதை வைத்து பணம் பறித்துள்ளார்.

இதை அடுத்து 4 பேர் மீதும் பெண் வன்கொடுமை, மிரட்டல், கூட்டுச் சதி என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குமரன் நகர் போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

சினிமா, சின்னத்திரை டிவிக்களின் பாணியில் நடந்த இந்த நிகழ்வு, பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு பாடம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உள்ளாட்சி தேர்தல் வரட்டும்; பாஜக., கூட்டணியை முடிவு செய்வோம்: ஓபிஎஸ் டுவீட்

சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரட்டும், பாஜக.,வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டியுள்ளார். முன்னர் பாஜக-வுடன் கூட்டணி குறித்து டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்ட பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து மீண்டும் ஒரு புதிய டுவீட்டை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜக-வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டார். முன்னதாக, நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டிவிட்டரில் வெளியான இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே அவர் பதிவு செய்த இரு டிவிட்கள் அந்தப் பதிவில் இருந்துஎடுக்கப் பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் வா. மைத்ரேயன் எம்பி “ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில் பதிவான கருத்துக்கு உடனடியாக மறுப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விவரம் தெரியாதவர்கள் அப்படியொரு பதிவைப் போட்டுள்ளனர்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ ட்விட் பக்கத்தில், கூட்டணிகுறித்த பதிவுகள் காலை 11.40 மணியளவில் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த ட்விட்டைப் பதிவுசெய்த ஐடி விங்க்கில் உள்ளவர்களுக்கு, அணி தலைமை கடும் எச்சரிக்கை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

தேர்தல் தேதியை முடிவு செய்ய லஞ்சம்! : டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

தேர்தல் தேதியை முடிவு செய்ய லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் தரப்பில் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர்.

5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5ம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யக் கூறியதாக புகார் கூறியுள்ளனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குருபரம்பரை மாலையில் நடு நாயகர்!


ஞானத்தை வழங்குபவர் குரு. அவரே வழி வழியாய் சீடர்களை உருவாக்கி ஞானப் பரம்பரையை நிறுவுகிறார். வைணவ குரு பரம்பரை, மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது. குரு சீட பரம்பரை என்பது வழிவழியாக நீண்டு கொண்டே செல்லும். ஆனால், வைணவ குருபரம்பரையை, துவங்கிய இடத்திலேயே மீண்டும் சேரும் ஒரு மாலையைப் போல் சொல்வார்கள்.
“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள். மகான் ஸ்ரீராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் அருளிய செய்யுள்.

ஸ்ரீமந் நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அவருக்கு வழிகாட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்தில் அந்த நாராயணனே இருக்கிறார்! பக்தனுக்கு இறைவனை அடைவது நோக்கம் என்றால், அதற்கு வழி (குருவின் வழிகாட்டலில்) இறைவனை வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் குரு பரம்பரையின் முதல் குருவாக லக்ஷ்மியோடு இணைந்த மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தமே!

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக சுவாமி மணவாள மாமுனிகள் வரை நீண்ட இந்த ஆசார்ய பரம்பரையில், நடு நாயகமாக, ஹாரத்தில் ஒளிரும் மணியைப் போல் திகழ்பவர் சுவாமி ராமானுஜர்.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் அடுத்து, மகாலக்ஷ்மி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமானுஜர் என நீள்கிறது.

நாம் கோயில்களுக்குச் சென்றால், இந்த வரிசையிலேயே திருமேனிகள் அமையப் பெற்றுள்ளதைக் காணலாம். கருவறையில் பெருமாள் லக்ஷ்மியை மார்பில் கொண்டும், தாயார் தனி சந்நிதியிலும், விஷ்வக்சேனரை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார் ஆசார்யர்களும் சன்னிதி கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வகையில், விஷ்ணு ஆலயமே, வைணவ குரு பரம்பரையின் வணங்கும் விதத்தை வெளிக்காட்டும்!

பெருமாள், பிராட்டியை அடுத்து, விஷ்வக்சேனர் எனும் சேனைநாதர். சேனை முதலியார். சேனைமுதலி! ஆசார்ய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர், படைகளுக்குத் தலைவர். இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி. அடுத்து கஜானனர். யானை முகம் கொண்டவர். ஆனால் விநாயகர் அல்லர்.

இந்தப் பூவுலகில், விஷ்வக்சேனரே, ஸ்வாமி நம்மாழ்வாராக அவதரித்தாராம். தாமிரபரணிக் கரையில் உள்ள திருநகரியில் காரியார்- உடைய நம்பி தம்பதிக்கு அவதரித்தவர். இவர் அவதாரத்தாலேயே இந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது. நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் விழுந்து வணங்கி இறுதிக் காலம் வரை அவருக்குத் தொண்டு செய்தார். நம்மாழ்வார் மீது இவர் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகம் இயற்றினார்.

ஆழ்வார்கள் காலத்தில் வழி வழியாய் வந்த பிரபந்தப் பாசுரங்கள், ஒரு கட்டத்தில் கால வெள்ளத்தில் வழக்கில் இருந்து மறைந்துவிட, ஆசார்யரான நாதமுனிகளே நம்மாழ்வாரை தியானித்து, இந்தக் கண்ணி நுண் சிறுத்தாம்பினை பன்னீராயிரம் முறை சொல்லி, ஆழ்வாரின் அருளுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டெடுத்தார் என்பர்.

அவ்வாறு பிரபந்தப் பாசுரங்களைப் பெற்ற நாதமுனிகள், தம் சீடர் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர் மூலம் இசையமைத்து அவற்றைப் பரப்பச் செய்தார். நாதமுனிகளின் பேரனும் மணக்கால்நம்பியின் சீடருமான ஆளவந்தார் இந்தப் பிரபந்தப் பாசுரங்களை மேலும் வளரச் செய்தார். ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி இவற்றைக் காத்திருந்து, காத்து இருந்து, தம் சீடரான ராமானுஜரிடம் சேர்ப்பித்தார். வைணவ நெறியை உபய வேதாந்தம் என்பர். தமிழும் வடமொழியும் ஒருசேரக் கோலோச்சும். அந்த உபய வேதாந்த நெறியைக் காத்த பெருமை, ராமானுஜருக்கும், அவருக்குப் பின் அவரது சீடர்கள் வழியே வந்த ஆச்சார்ய பரம்பரைக்கும் உரியது!

கூரத்தாழ்வான் ‘லக்ஷ்மிநாத’ என்ற செய்யுளில் ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். ஆனால், ஸ்வாமி வேதாந்த தேசிகனோ, கீழிருந்து மேலாக, குருபரம்பரையை தியானிக்கிறார். நம் குருவை முதலில் சொல்லி, அவருக்கும் ஆசார்யன் என்று படிப்படியாகக் கூறி, இறுதியில் பெருமானின் திருவடியை அடைதலைச் சிந்திக்கிறார்.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!

பெருமானே முதல் குருவாக அமைந்து சீடர் பரம்பரையை தோற்றுவித்தாலும், சுவாமி ராமானுஜரிடமே சீடராக அமர்ந்து, குரு பரம்பரையை விளங்கச் செய்தார் பெருமான். திருக்குறுங்குடி திவ்யத் தலத்தில், பெருமாள் நம்பிராயர், தாமே ஸ்ரீராமானுஜருக்கு சீடராக வந்து, அவர் திருக் கரத்தால் திருமண் காப்பிட்டுக் கொண்டார். அதுபோல், திருப்பதியில் வேங்கடேசப் பெருமான் குறித்த சர்ச்சை ஒன்று ஏற்பட்டபோது, ஸ்வாமி ராமானுஜர் சங்கு சக்கரங்கள் எடுத்துக் கொடுத்து, அதனைப் பெருமாள் தம் இரு கரங்களிலும் ஏந்தி தரித்துக் கொண்டார். அதனால், ஸ்ரீராமானுஜர் கையால் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொள்ளுவதுபோல், பெருமான் எடுத்து சூடிக் கொண்டு, தாமும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு சிஷ்யரென ஆக்கிக் கொண்டார் என்பர்.

ஸ்வாமி ராமானுஜர் ஏன் அவ்வளவு சிறப்புடன் கொண்டாடப் படுகிறார் என்றால், காரணம் அவருக்கு அமைந்த ஆசார்ய புருஷர்களும், சீடர் குழாமும்தான்! ராமானுஜருக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை அவருக்கு போதித்தார்கள்.

பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருமாலையாண்டான் என ஸ்ரீராமானுஜருக்கு ஆசார்யர்கள் ஒவ்வொருவரும் ராமாயணம், பிரபந்தம், சரம ஸ்லோகார்த்தம், திருமந்திரம் என அனைத்தையும் உள்புகுத்தினர். அவர்களின் ஒட்டுமொத்த ஞானத்தின் வெளிப்பாடாய் மிளிர்ந்தவர் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு தாம் பெற்ற ஞானத்தை, தம் சீடர்கள் அனைவருக்கும் அளித்தார். அவரின் சீடர்களான கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் ஞானச் சிகரங்களாகவே விளங்கினர்.

ஸ்வாமி ராமானுஜரின் தத்துவ தரிசனத்தை எம்பெருமானார் தரிசனம் என்றே அரங்கநாதனான நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தாராம்.

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தாம் பதினெட்டு முறை சென்று முயன்று பெற்ற சரமஸ்லோக அர்த்தத்தை, அதனைக் கேட்க பெருவிருப்புடன் தன்னைப் போலவே வெகு காலம் காத்திருந்த அன்பர்களுக்கு, குருவின் கட்டளையை மீறி உபதேசித்தார் ராமானுஜர். இதனை, ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர், ஏரார் எதிராசர் இன்னருளால், ஆசையுடையோர்க்கெல்லாம் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் என்று மணவாள மாமுனிகள் குறிப்பிடுகிறார்.

வழிவழியாய், குரு சீடர் என்று வந்த உபதேசத்தை, அதனைப் பெற ஆசையுடன் காத்திருக்கும் அனைவருக்கும் உபதேசிக்கலாமென முன்னர் இருந்த வரம்பை மாற்றி அமைத்த கருணை மிகுந்தவர் ஸ்ரீராமானுஜர் என்பர். அதனாலேயே அவரை காரேய் கருணை ராமானுஜர் என்றும் அழைத்தனர்.

ஸ்ரீராமானுஜருக்குப் பின்னும் தொடர்ந்த வைணவ குரு பரம்பரையில், கடைசி ஆசார்யராக விளங்கியவர் மணவாள மாமுனிகள். அவர் திருவரங்கத்தில் திருவாய்மொழிப் பொருளை விரித்துரைத்து காலட்சேபம் செய்கையில், அவரை கௌரவிக்க ஸ்ரீரங்கநாதப் பெருமானே சிறுவன் வடிவில் வந்து, ஸ்ரீசைலேச தயாபாத்ரம் எனும் தனியனைக் கூறி, மணவாள மாமுனிகளின் சீடராகக் காட்டிக் கொண்டார். எனவே, மாமுனிகளுக்குப் பின்னும் அவரின் சீடரென அரங்கன் தன்னை ஆக்கிக் கொண்டு, அவனே வைணவ குரு பரம்பரையின் முதல் குருவும் ஆக நின்று, இந்த குரு பரம்பரையை ஒரு ரத்ன மாலை போல் அமைத்தான் என்பர்.

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு மஹோத்ஸவத்தில் இந்த குரு ரத்தினத்தின் புகழை மேலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது சிஷ்யர்களின் கடமை!

– செங்கோட்டை ஸ்ரீராம்

வைணவ குருபரம்பரை

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது.
“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்
நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்”
‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’ என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

இது ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வார் அருளிய செய்யுள். வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையை இது சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

லக்ஷ்மிநாதனான நாராயணனிடம் துவங்குகிறது இந்தப் பெருமை மிக்க பரம்பரை. நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைஷ்ணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அந்த வைஷ்ணவருக்கு வழிகாட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்திலும் நாராயணனே இருக்கிறார்!

வைணவத்தில் ஒரு கோட்பாடு உண்டு. ஒரு மனிதன் அடைய வேண்டிய இடமும் (உபேயம்) அடைய வேண்டிய வழியும் (உபாயம்) ஒன்றே!
இறைவனை அடைவது நோக்கம் என்றால், அதற்கு வழி இறைவனை (ஆச்சார்யர்களின் வழிகாட்டலின்படி) வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் ஆச்சார்யராக மகாலக்ஷ்மியோடு இணைந்திருக்கும் மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தம்தானே!

மகாவிஷ்ணு எப்போதும் மகாலக்ஷ்மியோடு இணைந்தே இருப்பதாகக் கொள்வது வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறார் என்பதால், மகாவிஷ்ணு அல்லது நாராயணன் என்று சொன்னாலும் அது மகாலக்ஷ்மியோடு கூடியிருக்கும் பெருமாளைத்தான் குறிக்கும்.’ ‘லக்ஷ்மிநாத’ என்று கூரத்தாழ்வார் குறிப்பிட்டிருப்பதன் முக்கியத்துவமும் இதுதான்.

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக நமது ஆச்சார்யர் வரை ஆச்சார்ய பரம்பரையில் உள்ள அனைவருக்கும் நமது வணக்கத்தைத் தெரிவிக்கும் செய்யுள் இது.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆச்சார்யர்கள் யார்? வரிசையாக எல்லாப் பெயர்களையும் பார்ப்போம்.
மகாலக்ஷ்மியுடன் இணைந்திருக்கும் மகா விஷ்ணு.
மகாலட்சுமி
விஷ்வக்சேனர்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
ராமானுஜர்
-இந்தப் பட்டியலில் மகாலக்ஷ்மி இரண்டு முறை வருவதைப் பார்க்கலாம். முதலில் மகாவிஷ்ணுவுடன் இணைந்து, பிறகு தனியே! இது எப்படி என்றால், எல்லா வைணவக் கோவில்களிலும் கருவறையில் இருக்கும் மூலவரான பெருமாளின் மார்பில் மகாலட்சுமி இருப்பார். அது தவிர சில கோவில்களில் பக்கத்திலும் இருப்பார். தனிச் சன்னிதியிலும் இருப்பார்.

மகாலக்ஷ்மியின் கருணைதான் நமக்குப் பெருமாளின் அருளைப் பெற உதவுகிறது.

ஒரு படித்த இளைஞன் வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போகிறான். அவனுக்குப் பல நிலைகளில் வெவ்வேறு உயர் அதிகாரிகளிடம் இன்டர்வியூ இருக்கும். இறுதியாகப் பொது மேலாளர் அவனை இன்டர்வியூ செய்கிறார். அவர் தேர்வு செய்து விட்டாலே அவனுக்கு வேலை நிச்சயம். ஆனால் அவன் தலைமை அதிகாரியையும் சந்திக்க வேண்டி இருக்கும். அப்போது தலைமை அதிகாரியுடன் பொது மேலாளரும் இருப்பார். தலைமை அதிகாரிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூட, பொது மேலாளர் அவனுக்குப் பரிந்து பேசுவார். (‘இல்லை சார், பிளஸ் 2-வில் மார்க் குறைவாக இருந்தாலும் கல்லூரியில் நல்ல மார்க் வாங்கி இருக்கிறார்’) கருணைக் கடலான மகாலக்ஷ்மித் தாயாரும் இதுபோல் பெருமாளிடம் ‘இவருக்கு அருள் புரிய வேண்டும’ என்று பரிந்துரைப்பார்.

விஷ்வக்சேனர் என்பவர் சேனைநாதர். அதாவது படைகளுக்குத் தலைவர். இவர் யானை முகம் கொண்டவர். ஆனால் இவர் விநாயகர் அல்ல. இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி.

நம்மாழ்வார் விஷ்வக்சேனரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தாமிரபரணிக் கரையில் திருநகரி என்ற ஊரில் காரியார்- உடைய நம்பி தம்பதிக்குப் பிறந்தவர். (இவர் பிறந்ததால் அந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது). பிறவியிலே ஞானியான இவர் மதுரகவி ஆழ்வாரால் இனம் கண்டுகொள்ளப்பட்டவர்.

நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் வீழ்ந்து வணங்கியதுடன் நம்மாழ்வாரின் இறுதிக்காலம் வரை அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.

நம்மாழ்வார் மீது இவர் இயற்றிய ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகம் (பத்துப் பாடல்கள்) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. திருமாலைப் பற்றிப் பாடாவிட்டாலும், திருமாலின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் மதுரகவியும் ஆழ்வார் என்று அங்கீகரிக்கப்பட்டவர்.

ஒரு காலகட்டத்தில் வழக்கில் இல்லாமல் மறைந்துவிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரை தியானித்துப் பெற்று இவ்வுலகுக்கு வழங்க நாதமுனிகளுக்கு உதவியாக இருந்தது மதுரகவி ஆழ்வாரின் ‘கன்னி நுண் சிறுத்தாம்பு’தான்.

நம்மாழ்வாருக்குப் பிறகு நாதமுனிகள், அவரது சீடர் உய்யக்கொண்டார், அவரது சீடர் மணக்கால் நம்பி, அவரது சீடர் ஆளவந்தார், ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி, பெரிய நம்பியின் சீடர் ராமானுஜர்.

ராமானுஜருக்குப் பின் அவரது பல சீடர்கள் வழியே இந்த ஆச்சார்ய பரம்பரை கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது.

துவக்கத்தில் நாம் பார்த்த கூரத்தாழ்வாரின் ‘லக்ஷ்மிநாத’ என்ற செய்யுள் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!

-வேதாந்த தேசிகர்

4 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகும்: கதியைக் கலக்கும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!

சென்னை:
தமிழகத்தில் மேலும் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திர’ வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவில் வெயில் தகிக்கிறது. திருத்தணி, திருச்சி, வேலூர், மதுரை, கரூர், நெல்லை, வேலூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் மேலும் 4 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து, வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்ப காற்று வீசுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலையும், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 3 முதல் 4 டிகிரி வெப்பநிலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தச் சூழல் மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். கடல் காற்றின் தன்மையை பொறுத்து, வெப்பநிலை குறையும். அதே சமயம் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கோடை மழை இயல்பாக 43.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் தற்போது அந்தக் காலக்கட்டத்தில் 42.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 4 சதவீதம் குறைவு.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக தக்கலை, போச்சம்பள்ளி, தாளவாடி, துவாகுடியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேன்கனிகோட்டை, சூளகிரியில் தலா 5 செ.மீ. மழையும், ஈரோடு, குடியாத்தம், அருப்புக்கோட்டை, குளச்சல், குழித்துறையில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தளி, கன்னியாகுமரி, திருவையாறு, திருப்பத்தூர், திருச்சுழி, விராலிமலை, திருப்பூரில் தலா 3 செ.மீ. மழையும், சத்தியமங்கலம், இரணியல், ஒகேனக்கல், பேச்சிப்பாறை, ஸ்ரீவைகுண்டம், நத்தம், பென்னாகரத்தில் தலா 2 செ.மீ. மழையும், சாத்தூர், பீளமேடு, வாடிப்பட்டி, பெரியகுளம், வாணியம்பாடியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

– என்று கூறினார்.

பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்: அமைச்சரவை ஒப்புதல்

டோக்கியோ:

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது குறித்த மசோதாவுக்கு, ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 83) நாட்டின் 125-வது மன்னராகத் திகழ்பவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ல் அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று குறிப்பிட்டார்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் இவர் ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளார். இந்நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையை கைவிட்டாலும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மன்னிக்க மாட்டேன்: விக்கிலீக்ஸ் அசாஞ்சே

என் மீதான விசாரணையை கைவிட்டாலும், கடந்த 7 வருடங்களாக எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கியமான ரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. இந்நிலையில், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்ற அசாஞ்சே மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும், அசாஞ்சே தன் கோபத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

என் மீது அவதூறு சுமத்தி 7 ஆண்டுகளாக தடுத்து வைத்திருந்த ஸ்வீடன் அதிகாரிகளின் செயலை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.

பாலியல் வழக்கு விசாரணையை ஸ்வீடன் கைவிடும் முடிவை ஈக்வடார் வரவேற்றுள்ளது. அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்: ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு; உருவபொம்மை எரிப்பு!

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பது குறித்து நேற்று பேச்சினூடே குறிப்பிட்டார். அப்போது அவர், ‘ஏன் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள்?’ என்று பேசினார். இந்தப் பேச்சு தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை அம்பத்தூரில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ரஜினியின் உருவ பொம்மையை சிலர் எரித்தனர். ‘ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.