குருபரம்பரை மாலையில் நடு நாயகர்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

acharyas guruparampara malai - 2026
ஞானத்தை வழங்குபவர் குரு. அவரே வழி வழியாய் சீடர்களை உருவாக்கி ஞானப் பரம்பரையை நிறுவுகிறார். வைணவ குரு பரம்பரை, மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது. குரு சீட பரம்பரை என்பது வழிவழியாக நீண்டு கொண்டே செல்லும். ஆனால், வைணவ குருபரம்பரையை, துவங்கிய இடத்திலேயே மீண்டும் சேரும் ஒரு மாலையைப் போல் சொல்வார்கள்.
“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள். மகான் ஸ்ரீராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் அருளிய செய்யுள்.

ஸ்ரீமந் நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அவருக்கு வழிகாட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்தில் அந்த நாராயணனே இருக்கிறார்! பக்தனுக்கு இறைவனை அடைவது நோக்கம் என்றால், அதற்கு வழி (குருவின் வழிகாட்டலில்) இறைவனை வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் குரு பரம்பரையின் முதல் குருவாக லக்ஷ்மியோடு இணைந்த மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தமே!

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக சுவாமி மணவாள மாமுனிகள் வரை நீண்ட இந்த ஆசார்ய பரம்பரையில், நடு நாயகமாக, ஹாரத்தில் ஒளிரும் மணியைப் போல் திகழ்பவர் சுவாமி ராமானுஜர்.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் அடுத்து, மகாலக்ஷ்மி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமானுஜர் என நீள்கிறது.

நாம் கோயில்களுக்குச் சென்றால், இந்த வரிசையிலேயே திருமேனிகள் அமையப் பெற்றுள்ளதைக் காணலாம். கருவறையில் பெருமாள் லக்ஷ்மியை மார்பில் கொண்டும், தாயார் தனி சந்நிதியிலும், விஷ்வக்சேனரை முன்னிட்டுக் கொண்டு ஆழ்வார் ஆசார்யர்களும் சன்னிதி கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வகையில், விஷ்ணு ஆலயமே, வைணவ குரு பரம்பரையின் வணங்கும் விதத்தை வெளிக்காட்டும்!

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

பெருமாள், பிராட்டியை அடுத்து, விஷ்வக்சேனர் எனும் சேனைநாதர். சேனை முதலியார். சேனைமுதலி! ஆசார்ய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர், படைகளுக்குத் தலைவர். இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி. அடுத்து கஜானனர். யானை முகம் கொண்டவர். ஆனால் விநாயகர் அல்லர்.

இந்தப் பூவுலகில், விஷ்வக்சேனரே, ஸ்வாமி நம்மாழ்வாராக அவதரித்தாராம். தாமிரபரணிக் கரையில் உள்ள திருநகரியில் காரியார்- உடைய நம்பி தம்பதிக்கு அவதரித்தவர். இவர் அவதாரத்தாலேயே இந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது. நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் விழுந்து வணங்கி இறுதிக் காலம் வரை அவருக்குத் தொண்டு செய்தார். நம்மாழ்வார் மீது இவர் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகம் இயற்றினார்.

ஆழ்வார்கள் காலத்தில் வழி வழியாய் வந்த பிரபந்தப் பாசுரங்கள், ஒரு கட்டத்தில் கால வெள்ளத்தில் வழக்கில் இருந்து மறைந்துவிட, ஆசார்யரான நாதமுனிகளே நம்மாழ்வாரை தியானித்து, இந்தக் கண்ணி நுண் சிறுத்தாம்பினை பன்னீராயிரம் முறை சொல்லி, ஆழ்வாரின் அருளுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டெடுத்தார் என்பர்.

அவ்வாறு பிரபந்தப் பாசுரங்களைப் பெற்ற நாதமுனிகள், தம் சீடர் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர் மூலம் இசையமைத்து அவற்றைப் பரப்பச் செய்தார். நாதமுனிகளின் பேரனும் மணக்கால்நம்பியின் சீடருமான ஆளவந்தார் இந்தப் பிரபந்தப் பாசுரங்களை மேலும் வளரச் செய்தார். ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி இவற்றைக் காத்திருந்து, காத்து இருந்து, தம் சீடரான ராமானுஜரிடம் சேர்ப்பித்தார். வைணவ நெறியை உபய வேதாந்தம் என்பர். தமிழும் வடமொழியும் ஒருசேரக் கோலோச்சும். அந்த உபய வேதாந்த நெறியைக் காத்த பெருமை, ராமானுஜருக்கும், அவருக்குப் பின் அவரது சீடர்கள் வழியே வந்த ஆச்சார்ய பரம்பரைக்கும் உரியது!

கூரத்தாழ்வான் ‘லக்ஷ்மிநாத’ என்ற செய்யுளில் ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். ஆனால், ஸ்வாமி வேதாந்த தேசிகனோ, கீழிருந்து மேலாக, குருபரம்பரையை தியானிக்கிறார். நம் குருவை முதலில் சொல்லி, அவருக்கும் ஆசார்யன் என்று படிப்படியாகக் கூறி, இறுதியில் பெருமானின் திருவடியை அடைதலைச் சிந்திக்கிறார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!

பெருமானே முதல் குருவாக அமைந்து சீடர் பரம்பரையை தோற்றுவித்தாலும், சுவாமி ராமானுஜரிடமே சீடராக அமர்ந்து, குரு பரம்பரையை விளங்கச் செய்தார் பெருமான். திருக்குறுங்குடி திவ்யத் தலத்தில், பெருமாள் நம்பிராயர், தாமே ஸ்ரீராமானுஜருக்கு சீடராக வந்து, அவர் திருக் கரத்தால் திருமண் காப்பிட்டுக் கொண்டார். அதுபோல், திருப்பதியில் வேங்கடேசப் பெருமான் குறித்த சர்ச்சை ஒன்று ஏற்பட்டபோது, ஸ்வாமி ராமானுஜர் சங்கு சக்கரங்கள் எடுத்துக் கொடுத்து, அதனைப் பெருமாள் தம் இரு கரங்களிலும் ஏந்தி தரித்துக் கொண்டார். அதனால், ஸ்ரீராமானுஜர் கையால் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொள்ளுவதுபோல், பெருமான் எடுத்து சூடிக் கொண்டு, தாமும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு சிஷ்யரென ஆக்கிக் கொண்டார் என்பர்.

ஸ்வாமி ராமானுஜர் ஏன் அவ்வளவு சிறப்புடன் கொண்டாடப் படுகிறார் என்றால், காரணம் அவருக்கு அமைந்த ஆசார்ய புருஷர்களும், சீடர் குழாமும்தான்! ராமானுஜருக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை அவருக்கு போதித்தார்கள்.

பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருமாலையாண்டான் என ஸ்ரீராமானுஜருக்கு ஆசார்யர்கள் ஒவ்வொருவரும் ராமாயணம், பிரபந்தம், சரம ஸ்லோகார்த்தம், திருமந்திரம் என அனைத்தையும் உள்புகுத்தினர். அவர்களின் ஒட்டுமொத்த ஞானத்தின் வெளிப்பாடாய் மிளிர்ந்தவர் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு தாம் பெற்ற ஞானத்தை, தம் சீடர்கள் அனைவருக்கும் அளித்தார். அவரின் சீடர்களான கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் ஞானச் சிகரங்களாகவே விளங்கினர்.

ஸ்வாமி ராமானுஜரின் தத்துவ தரிசனத்தை எம்பெருமானார் தரிசனம் என்றே அரங்கநாதனான நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தாராம்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தாம் பதினெட்டு முறை சென்று முயன்று பெற்ற சரமஸ்லோக அர்த்தத்தை, அதனைக் கேட்க பெருவிருப்புடன் தன்னைப் போலவே வெகு காலம் காத்திருந்த அன்பர்களுக்கு, குருவின் கட்டளையை மீறி உபதேசித்தார் ராமானுஜர். இதனை, ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர், ஏரார் எதிராசர் இன்னருளால், ஆசையுடையோர்க்கெல்லாம் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் என்று மணவாள மாமுனிகள் குறிப்பிடுகிறார்.

வழிவழியாய், குரு சீடர் என்று வந்த உபதேசத்தை, அதனைப் பெற ஆசையுடன் காத்திருக்கும் அனைவருக்கும் உபதேசிக்கலாமென முன்னர் இருந்த வரம்பை மாற்றி அமைத்த கருணை மிகுந்தவர் ஸ்ரீராமானுஜர் என்பர். அதனாலேயே அவரை காரேய் கருணை ராமானுஜர் என்றும் அழைத்தனர்.

ஸ்ரீராமானுஜருக்குப் பின்னும் தொடர்ந்த வைணவ குரு பரம்பரையில், கடைசி ஆசார்யராக விளங்கியவர் மணவாள மாமுனிகள். அவர் திருவரங்கத்தில் திருவாய்மொழிப் பொருளை விரித்துரைத்து காலட்சேபம் செய்கையில், அவரை கௌரவிக்க ஸ்ரீரங்கநாதப் பெருமானே சிறுவன் வடிவில் வந்து, ஸ்ரீசைலேச தயாபாத்ரம் எனும் தனியனைக் கூறி, மணவாள மாமுனிகளின் சீடராகக் காட்டிக் கொண்டார். எனவே, மாமுனிகளுக்குப் பின்னும் அவரின் சீடரென அரங்கன் தன்னை ஆக்கிக் கொண்டு, அவனே வைணவ குரு பரம்பரையின் முதல் குருவும் ஆக நின்று, இந்த குரு பரம்பரையை ஒரு ரத்ன மாலை போல் அமைத்தான் என்பர்.

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு மஹோத்ஸவத்தில் இந்த குரு ரத்தினத்தின் புகழை மேலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது சிஷ்யர்களின் கடமை!

– செங்கோட்டை ஸ்ரீராம்

Related articles

Recent articles

spot_img