
பாகிஸ்தானில் இஸ்லாமிய முறைக்கு விரோதமாக வாடிக்கையாளர்களின் தாடியை ஸ்டைலிங் செய்ததற்காக முடிதிருத்துபவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நான்கு முடிதிருத்துபவர்கள் தமது வாடிக்கையாளர்களின் தாடியை ஸ்டைல் செய்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்து உள்ளது.
முடிதிருத்துபவா்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து இது பிரபலமானது என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமீன் என்ற நபர், முடிதிருத்துபவர்களை காவலில் வைப்பதில் போலீசாருக்கு வழிகாட்டுவதைக் காணலாம்.
முடிதிருத்துபவர்களிடம் தாடியை ஏன் ஸ்டைலான முறையில் வடிவமைக்கிறீர்கள் என்று கேட்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முடிதிருத்துபவா்கள் தொழிற்சங்கம் சமீபத்தில் “தாடி ஸ்டைலாக வடிவமைப்பதை தடைசெய்து உள்ளது என்றும் அது குறித்து அனைத்து சிகையலங்கார நிபுணர்களுக்கும் தெரிவித்துள்ளதாகவும் சமீன் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு முடிதிருத்துபவருக்கும் காவல்துறையினர் ரூ.5,000 அபராதம் விதித்ததாகவும், எதிர்காலத்தில் இஸ்லாமிய அல்லாத முறையில் தாடியை வடிவமைக்க கூடாது என எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.



