
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில் ஒன்றில் நடைபெற்ற சஷ்டி விழாவின்போது முருகன் சிலையின் முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் கௌஸிக பாலசுப்பிரமணியமர் ஆலயம் அமைந்துள்ளது. எல்லா மதத்தினரும் வந்து வணங்கக்கூடிய இந்த கோயிலில் வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலின் சிறப்பம்சமே முகமது கவுஸ் எனும் இஸ்லாமியர் இந்த கோயிலை கட்டியது தான் என்று கூறப்படுகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சஷ்டி விழாவின்போது முருகனுக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலையில் இருந்து வியர்வை துளிகள் முத்து முத்தாக சிந்தியது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.சிக்கலிலும் இது போல் வியர்வை துளிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கௌசிகா பாலசுப்பிரமணியன் கோவிலில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.