வாங்கிய கடனில் விஜய் மல்லையா இதுவரை 1 ரூபாயை கூட திருப்பிச் செலுத்தவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விஜய் மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, கடன்களை திருப்பிச் செலுத்துவதாக கூறினாலும் இதுவரை 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷாந்த் மேத்தா தெரிவித்தார்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி, லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது என அவர் கோரி வருவதையும் சுட்டிக் காட்டினார்.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் மல்லையா கால அவகாசம் கூறுவதோ, வழக்கில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க கூடாது என்று தெரிவித்தனர்.