தூத்துக்குடியில் வாகன பழுதுபார்க்கும் கடையின் முன்பு நிறுத்தியிருந்த காவல்துறையின் டெம்போ வாகனத்தின் மீது ஏறி, 3 இளைஞர்கள் `டிக் டாக்’ வீடியோ பதிவிட்டனர்.
அதில், “தூக்கிட்டானுங்கம்மா… நம்ம தூத்துக்குடி பசங்க, ரொம்ப மோசமானவனுங்க, ரோடுன்னா ரோடுதான்…” என்ற நடிகர் விஜய் பேசும் வசனத்துக்குதான் டெம்போ மீது அமர்ந்து டப்ஸ்மாஷ் செய்தனர்.
வசனத்தைத் தொடர்ந்து கீழே குதிக்கும் அவர்கள், “பத்து பேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சதில்ல…” என்ற வசனத்துக்கு நின்றபடி டப்ஸ்மாஷ் செய்கின்றனர். 14 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது.
இந்நிலையில், டப்ஸ்மாஷ் செய்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கண்டுபிடித்து அவர்களைத் தென்பாகம் காவல்நிலைய காவல்துறை விசாரணை செய்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்தை காலை முதல் மாலை வரை ஒழுங்கு செய்யும் நூதன தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறுகையில், “காவல்துறை வாகனத்தின் மீது ஏறி டிக் டாக் வீடியோ எடுத்த அந்த மூன்று பேரையும் விசாரணை செய்ததில், தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்.
காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.
அத்துடன், இனிமேல் இதுபோல விளையாட்டாக எதுவும் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ளது தண்டனை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி. அத்துடன் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். தவற்றை உணர்ந்ததால் வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை” என்றார்.
இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அளிக்கப்பட்ட நூதன தண்டணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.