ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்கள் கொடுக்கும் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி லாட்டரி திட்டத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும் அரசுக்கு வருவாய் கூடும் என்றும் மத்திய அரசு எண்ணுகிறது.
ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான ரசீதை வைத்தே இந்த லாட்டரி குலுக்கலில் பங்கேற்க முடியும். இதற்காக ஜி.எஸ்.டி. நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்.) என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப் படுத்தப் படவுள்ளது.
பொதுமக்கள் தங்களது ஜி.எஸ்.டி. பில்லுடன் கூடிய ரசீதை வைத்து செல்போன் செயலியில் ஸ்கேன் செய்து இதனை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் லாட்டரி பரிசு திட்டத்தில் பங்கேற்க முடியும். இந்த செயலி இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜி.எஸ்.டி. பில் வைத்திருக்கும் அனைவரும் இந்த லாட்டரி குலுக்கலில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிர்ணயிக்கப்படவில்லை.
ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் என்று கூறப் படுகிறது.