தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி, மார்ச் 3ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும், அதற்கு தேர்வு மையங்களின் பட்டியலை தயார் செய்யும்படியும் ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களை நியமனம் செய்து அந்த பட்டியலை மார்ச் 13க்குள் சென்னைக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குளறுபடி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு முகநூலில் பதிவிட்டிருந்தார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் தென்னரசுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்திருந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்ததாகவும் தனித்தேர்வுக்கு பதிலாக பொதுத்தேர்வு என்று சுற்றறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
எட்டாம் வகுப்புக்கு ஏப்ரல் 2ந் தேதி முதல் 9ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று கடந்த 3-ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
இந்த சுற்றறிக்கையால் குழப்பம் நிலவிய நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் தனித்தேர்வர்களுக்காக ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.