மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் நேற்று மதுரையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். பிரதமரால் பாராட்டப் பட்ட அவரை பாஜக.,வினர் அழைத்துப் பாராட்ட… அவர் தனது குடும்பத்தினருடன் பாஜக,வில் இணைந்ததாக செய்தி வெளியானது.
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட, தனது மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகரில் வசித்து வரும் சலுான் கடைகாரர் மோகன் குறித்தும் அவரின் சேவைப்பணிகள் குறித்தும் ஞாயிற்றுக் கிழமை ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்நிலையில் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட பாஜக., தலைவர் சீனிவாசன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை பாஜக.,வினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்… என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அதெல்லாம் இல்லை என்று அப்பாவித் தனமாக ஒரு விளக்கத்தைச் சொல்லி அதிர வைத்திருக்கிறார் மோகன்.
அட நான் அதை ‘வாழ்த்து அட்டைன்னு நினைச்சேன்.. ஆனால் அது கட்சி உறுப்பினர் அட்டைன்னாங்க… என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் மோகன். தாம் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்ததாக வெளியான செய்திக்கு பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மறுப்பு தெரிவித்திருக்கிறார் இப்படி!
மோகன், தான் பாஜகவில் சேரவில்லை என்றும் வாழ்த்து அட்டை என நினைத்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டதாகவும், தாம் அனைத்து கட்சிக்கும் பொதுவான நபர் என்றும் கூறியுள்ளார்!
தன்னை எந்தக் கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம் என்று தெரிவித்த மோகன், பாஜக.,வில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் தனக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.