உணவகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் மும்பையில், பணி முடித்து இரவு வீட்டிற்கு செல்லும் போது, வழியில் மும்பை செண்ட்ரலில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், ஐஸ்க்ரீம் வாங்க சென்றுள்ளார்.
ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு முன்பாகவே கவுண்ட்டரில் பணம் செலுத்தி ஐஸ்க்ரீம்-க்கான பில்லை பெற்றுள்ளார். அதில் ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம்-க்கு ரூ.175 என இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து அதிர்ச்சியடைந்து உணவகத்தின் உரிமையாளரிடம் இது குறித்து கேட்டார்.
சரியாக பதில் சொல்லாமல், வேண்டுமானால் வாங்கிச் செல்லுங்கள், இல்லையெனில் வாங்காமல் போங்கள், இது தான் விலை என்று கறார் காட்டியிருக்கிறார் உணவக உரிமையாளர்.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உணவகத்தின் சார்பில், ‘ஐஸ்க்ரீமை பாதுகாத்து வைப்பதற்கு அவர்களுக்கு தனியே செலவு ஏற்படுவதாகவும், ஐஸ்க்ரீம் கடைக்கும் உணவகத்திற்கும் வித்தியாசம் உள்ளது’ என்றும் பதில் கூறப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த ஜாதவ், ‘நான் உணவகத்திற்குள் நுழையும் முன்னரே பணம் செலுத்தும் இடத்திலேயே பணத்தை செலுத்தி ஐஸ்க்ரீமை வாங்கி விட்டேன். கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளையோ பயன்படுத்தவும் இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்’ என வாதிட்டார்.
சுமார் 6 வருடங்களாக நீடித்த இந்த வழக்கில், உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், அந்த உணவகம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வரையில் லாபம் சம்பாதித்து வருவதாகவும், கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலை வைத்து விற்பனை செய்து வருவதால், இதுவரையில் ஏராளமான லாபங்களை ஈட்டியிருக்கும் என்றும், ஐஸ்க்ரீம் விலையை விட 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மன உளைச்சலுக்கு உள்ளான பாஸ்கருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.