நாடு முழுதும் 12 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியருக்கு ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசி, அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்,” என, சீரம் இந்தியா நிறுவன தலைவர் அடார் பூனாவாலா உறுதி அளித்தார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சைடஸ் கடிலா நிறுவனத்தின் ‘சைகோவ் – டி’ ஆகிய குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன.’
கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இந்தியா நிறுவனம் ‘கோவோவாக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இதை, 12 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த மாதம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார்.
பின் செய்தியாளர்களிடம் பூனாவாலா கூறியதாவது:தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தடைஇன்றி செய்து வருகிறது
பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. நிதி நெருக்கடிகள் எதுவுமின்றி பணிகள் துரிதமாக நடக்கின்றன. நாட்டில் 12 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியருக்கான இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை உள்ளது.
12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசி, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதன் விலை குறித்து இப்போது உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.