திருநெல்வேலி:
ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், சிஸ்டம் சரியில்லாததால் பாதியிலேயே முடிந்தது.
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் மாவட்ட மற்றும் மண்டல வாரியாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. இந்த அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் லஞ்சம் தர மறுத்தால் பல்வேறு காரணங்களைக் கூறி பத்திரம் பதியாமல் அலைய விடுகின்றனர். இது குறித்து ஏராளமான புகார்களை பொதுமக்கள் ஐஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன் முன்னோட்டாக கடந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி முதல் 154 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் முறை கொண்டு வருவதற்கு முன் இது தொடர்பாக பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க பதிவுத்துறை ஐஜி அறிவுறுத்தியுள்ளார். இந்தப் பயிற்சியை வரும் 14ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களிலும் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறை பெரும்பாலான அலுவலகங்களில் சோதனை முறையில் நடந்தது. இதில், பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இருந்த நடைமுறை சிக்கல்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டம், மண்டலம் வாரியாக பதிவுத்துறை கூடுதல் தலைவர் தலைமையில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வைக்கும் கருத்துக்களை வைத்து, ஆன்லைன் முறையில் பத்திரபதிவை இன்னும் எளிமையாக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யவும் பதிவுத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை நெல்லை மாவட்டம் தருவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் வைத்து, எட்டு மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க வந்து விட்டு, சிஸ்டம் சரியில்லை, சர்வர் பிரச்சினை எனக் கூறி 5 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இருந்தனர். இதனால் எரிச்சலடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்தக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
செய்தி: குறிச்சி சுலைமான்