இங்கிலீஷ்ல லெட்டர் குடுத்தா தமிழ் எப்படி வெல்லும்? எனக்குப் புரியல… உங்களுக்கு? – இப்படித்தான் கேள்வி கேட்கத் தோன்றுகிறது, ரவிக்குமார் எம்.பி.,யின் பேச்சுக்கு!
ஸ்வச்சதா அப்யான் – தூய்மை இயக்கம் குறித்த தகவல், நாடாளுமன்ற அவை வளாகத்தில் நடைபெறுவதாக அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது.
ஜூலை 13,14 சனி, ஞாயிறுகளில் நாடாளுமன்ற அவைத்தலைவர் முன்னிலையில், மகாத்மா காந்தி சிலை அருகே கூடுமாறும், காலை 9 மணி தொடங்கி 10.30 வரை நிகழ்ச்சி என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு, ஹிந்தியில் இருந்ததால் தங்களால் படித்தறிய முடியவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதை அடுத்து ஆங்கிலத்திலும் இந்த அறிவிப்பு அளிக்கப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ரவிக்குமார், தனது நிலைத்தகவலில் இறுதியில் குறிப்பிட்ட வாசகம்தான் நம் புருவத்தை நெரிக்கச் செய்கிறது.
ஆங்கிலத்தில் அறிவிப்பு தரப்பட்டால்… அதெப்படி வெல்லும் தமிழ்! ஆகும்?! ஆங்கிலத்தில் தரப்பட்டால் தமிழுக்கு வெற்றியா?!
ஹிந்தியில் தரப்பட்டதை உதவியாளர் மூலம் தமிழாக்கிக் கொண்டிருக்கலாம், அல்லது தகவலை கேட்டுப் பெற்றிருக்கலாம்! ஆனால் அது தெரியவில்லை என்று நிற்பது, தனக்கு இழுக்கு! அதைவிட, தாங்கள் இதைப் படித்தறிய முடியவில்லை என்று திருதிருவென முழித்து, கேட்டதும், உங்கள் இயலாமையைப் புரிந்து கொண்டு, ஆங்கிலத்தில் மறுக்காமல் உடனடியாக அளித்த மத்திய அரசின் செயல் எத்தனை பாராட்டத்தக்கது என்பதை நீங்களே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்! உங்கள் கோரிக்கையை செவிமடுக்காமல், அப்படித்தான் என்று அரசு பிடிவாதம் பிடித்திருந்தால், நீங்கள் இதனை அரசியல் ரீதியாக வெளியில் சொல்லியிருக்கலாம்! ஆனால் அரசுதான் உடனே உங்களுக்கு வசதி செய்து கொடுத்து, உங்களை கௌரவப் படுத்தியிருக்கிறதே!
ஒன்று மட்டும் நிச்சயம்… தமிழகத்தில் இருந்து மறத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு அனுப்பப் பட்ட 37 பேரும் இந்த ஐந்து வருட காலமும் ‘தமிழ்’ என்ற ஒன்றை மட்டுமே வெளியுலகுக்கு வெளிப்படுத்தி, வழக்கம் போல் தங்கள் ஆ…‘ராசா’ங்கத்தனத்தை செய்து கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
- மு.ராம்குமார்