“நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!”
(பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப் போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!)(27-08-2018 காலை சாய் டி.வி.யில் அற்புதமாக இது பற்றி சொன்னார்-திரு கணேச சர்மா)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகாபெரியவாளின் ஜெயந்தி உற்சவம். உற்சவம் என்றால் அங்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதும் பெரும் மனம் படைத்தவர் பிரதோஷம் மாமா.அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக் கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள் நடக்கும்
.
அடுத்தநாள் மகானின் திருநட்சத்திரமான அனுஷ தினம் . கோலாகலமாகக் கொண்டாடப்பட இருந்தது.அன்றைய தினம் வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போட வேண்டும் என்பது நடைமுறை.
பிரதோஷம் மாமாவுக்கு சொல்லியா தரவேண்டும்?
முதல் நாள் இரவு,மாமாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் இனி அமுதமாக பால்பாயசம் போடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
இதற்காக நூறு லிட்டர் பால் தேவைப்படலாம். முன்னேற்பாடாகச் சொல்லாமல் பால் எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் மாமா யோசிக்கவே இல்லை.
“ஜெயந்திக்கு பால் பாயசம் போடணும் ஏற்பாடு பண்ணிடு” என்று, இரவே சமையலறை நிர்வாகியிடம் சொன்னார்.
நூறு லிட்டர் பால் தேவைப்படும். சமையலறை நிர்வாகி “செய்கிறேன்!” என்று எப்படித் தைரியமாகச் சொல்லுவார்.
1980-ம் வருடம் இந்தச் சம்பவம் நடந்தது
பால் எவ்வளவு தேவையென்றாலும் முன் பணம் கட்டவேண்டும்
. எப்படிப் பால் பாயசத்தைத் தயாரிப்பது?.
“முடியாது!” என்று பிரதோஷம் மாமாவிடம் சொல்ல முடியுமா தயங்கித் தயங்கி நின்றார்.
“என்னப்பா பதிலையே காணோமே?”-மாமா கேட்டார்.
என்ன பதில் சொல்வது என்று இவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்க அப்போது திடீரென போன் ஒலித்தது.
மாமாவின் உத்தரவின்படி,காரியஸ்தர் போனை எடுத்தார்.
போனில் கேட்ட செய்தி அன்பரின் முகத்தில மலர்ச்சியை வரவழைத்தது. மகா பெரியவாளின் எல்லையற்ற அருளும் பிரதோஷம் மாமாவின் ஆழ்ந்த பக்தியும் .
அங்கே வெளிப்பட்ட போனில் வந்த செய்திதான் என்ன?
ஜோஷி என்கிற வடக்கத்திய அன்பர், மகானிடம் அளவற்ற அன்பு பூண்டவர். பசுக்களை வைத்து பண்ணையை நடத்துபவர்,
“ஜெயந்திக்கு,நூறு லிட்டர் பால் அனுப்பினால், அதைப் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?” என்றுதான் போனில் கேட்டார் ஜோஷி.
எப்படிப்பட்ட நேரத்தில் வருகிறது இந்தச் செய்தி!
பால் பாயசத்திற்கு வேண்டிய பால் கிடைத்துவிட்டது. பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப் போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!



