“அமாவா”(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)

Published:

“அமாவா”

(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)

(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)..

.சொன்னவர்;தில்லைநாதன்.சென்னை
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கர்நூல் வியாஸ பூஜை முடிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்த சமயம்,புதுப்பெரியவர்கள் வடக்கே யாத்திரை சென்று விட்டார்கள். மகாபெரியவர்களும் பால பெரியவர்களும் காஞ்சியில் தங்கியிருந்து தரிசனம் தந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த வடதேசத்துக்காரர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். நானும் பெரியவாளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தேன். என்னை அருகில் அழைத்த மகாபெரியவர்கள் பாலபெரியவர்களுக்கும் தமக்கும் நடுவிலிருந்த சிறிய இடைவெளியில் வந்து உட்காரச் சொன்னார்கள். நானும் ஒடுங்கியபடி அந்த குறுகலான இடத்தில் அமர்ந்தேன்.

மகாபெரியவர்கள் என்னை, “திதிகளில் கடைசித் திதி’என்ன?” என்று கேட்டார்கள்.

“அமாவாசை, பௌர்ணமாவாசை” என்றேன்.

“முதலில் சொன்னதை மட்டும் சொல்” என்றார்கள்.

“அமாவாசை” என்றேன்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.9 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“அதில் கடைசி எழுத்தை எடுத்துவிட்டுச் சொல்”

“அமாவா”

வடநாட்டுக்காரர்களைக் காட்டி,”அதை அவர்களிடம் சொல்!” என்றார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“அவர்களிடம் கேள்” என்று மறுபடியும் சொன்னார்கள்.

நான் அவர்களைப் பார்த்து “அமாவா!” என்றேன்.

“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.

“அவள் என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறாளா? என்று ஹிந்தியில் கேள்!” என்றார்கள்.

கேட்டேன்.

“நான் பார்த்ததில்லை!” என்று சொன்னாள்.

“நான் அவளைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்!”

சொன்னேன்.

“ஆமாம்,ஆமாம்!” என்றாள் அந்தப் பெண்மணி.

“ஆமாம் என்கிறாளே? எப்படி என்று கேள்!” என்றார்கள் பெரியவர்கள்

கேட்டேன்.

“நான் சின்னக் குழந்தை, இரண்டு வயது இருக்கும். அப்போது எங்கள் தாத்தா பெரியவர்களை எங்கள் அரண்மனைக்கு வரவழைத்துப் பாதபூஜை செய்திருக்கிறார்கள்.அப்போது பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் எங்கள் தாத்தா சொல்லி எனக்குத் தெரியும். நான் சின்னக் குழந்தையானதால் எனக்குப் பெரியவர்களைப் பார்த்த நினைவு இல்லை” என்று சொன்னாள், அந்தப் பெண்மணி.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பின்னர் விசாரித்தபோது காசி யாத்திரை சென்றிருந்த சமயம் பெரியவர்கள் அந்த ஜமீன்தாருடைய ஸமஸ்தானத்தின் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதைக் கேட்கும்போது பாலபெரியவர்கள் உட்பட அனைவருக்கும் ‘பெரியவாளுக்கு இத்தனை ஞாபகசக்தியா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பேர்கள் தரிசனத்துக்காக மிகவும் பக்தி சிரத்தையுடன் வந்திருந்தார்கள்.அந்த சமஸ்தானத்தின் பெயரைக் கூடச் சொன்னார்கள். அது எனக்கு நினைவு இல்லை

Related articles

Recent articles

spot_img