“எல்லாரும் நல்லா இருக்கணும்”-காமராஜர்

Published:

“எல்லாரும் நல்லா இருக்கணும்”

(விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ”எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்” என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.)

நேற்றைய தினமலர்

  திருப்பூர் கிருஷ்ணன்  

ஒருசமயம் காஞ்சிபுரத்தில் தேர்தல் நிதி வசூல் பற்றிய கூட்டம் ஒரு திரையரங்கில் நடந்தது. அதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்தார் முன்னாள் முதல்வர் காமராஜர். அவரிடம் எழுத்தாளர் பரணீதரன், மகாசுவாமிகளை தரிசிக்க செல்வோம் என அன்புடன் அழைத்தார்.

”இப்போ தேர்தல் வேலையா வந்திருக்கேன். அவரைப் பாத்தா நான் வேற வேலையா வந்த போது போகிற போக்கில் அவரையும் பாத்துட்டு வந்ததா ஆயிடும். அது சரியில்லை. அவரைச் சந்திக்க ஒரு தடவை தனியா வர்றேனே” என்றார். அவரது பதில் மகாசுவாமிகள் மீதிருந்த மரியாதையை காட்டியது.

காமராஜர் காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் மகாபெரியவரை தரிசித்த நிகழ்ச்சி வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அப்போது திருவண்ணாமலை சென்ற காமராஜர் காஞ்சிபுரத்திற்கும் வருவதாக மடத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

”அவருக்கு உடம்பு சரியில்லே. ரொம்ப துாரம் நடக்க வைக்க வேண்டாம். கார் எவ்வளவு துாரம் வர முடியுமோ அத்தனை துாரம் வர ஏற்பாடு பண்ணுங்கோ! பாதையில் கல்லும் முள்ளும் இல்லாமல் சரி செய்யுங்கோ” என சீடர்களிடம் உத்தரவிட்டார். காமராஜர் உட்கார ஆசனமும் ஏற்பாடானது.

காமராஜர் வந்ததும் உட்காரும்படி சைகை காட்டினார் மகாபெரியவர். ஆனால் அவர் மரியாதை காரணமாக நின்றார். இருவரும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர்.

மவுனமாக மகாசுவாமிகள் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை.

விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ”எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்” என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.

காரில் திரும்பும் போது பெரியவர் கொடுத்த பிரசாதத்தை பொக்கிஷமாக கருதி கையிலேயே வைத்திருந்தார். மகாசுவாமிகள் மீது அவருக்கு இருந்த அளவற்ற மரியாதையைக் காட்டியது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img