சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா
(“எங்களுக்கு ராஜ யோகம் !” என்று சொன்ன முதிய தம்பதி)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஒரு சிவராத்திரி நாளன்று விடியற்காலையில் பக்த சிரோமணிகளான ஒரு தம்பதி வந்து பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.
வயோதிகத் தம்பதி, அந்த அதிகாலைப் போதில் ஸ்நானம் செய்வதற்கு, தேகநிலை இடம் கொடுக்கவில்லை. அப்படியும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.
“வயசாயிடுத்து,பஞ்சாக்ஷர ஜபம் எடுத்துக் கொள்ளணும்.. பெரியவா அனுமதி கொடுக்கணும்.. இதோ நிற்கிறாரே, இந்த வைதிகரிடம் தான் ஒரு நல்ல நாள் பார்த்து… மந்த்ரோபதேசம் செய்து கொள்ளப்போறோம்..” என்றார் முதியவர்.
அன்பர் காட்டிய வைதிகரைப் பார்த்தார்கள் பெரியவா.
“இவரிடமா! பஞ்சாக்ஷரமா!….உபதேசமா!?” என்று இரண்டு முறை கேட்டார்கள். பின் தன்னுடைய சொம்பு தீர்த்தத்தை அவர்கள் மேல் புரோக்ஷித்தார்கள். முதியவரை ஆசமனம் செய்யச் சொன்னார்கள்.
உடனே, தானே அவர்களுக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ரம் உபதேசம் செய்தார்கள்.
தம்பதிக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவேயில்லை.
மந்த்ரோபதேசத்துக்கு, நாள் – நக்ஷத்ரம் பார்ப்பது சாமானிய வழக்கம். ஆனால், குருவே மனம் குளிர்ந்து உபதேசிக்க விரும்பினால், காலம்,யோகம் பார்க்க வேண்டியதில்லை என்கின்றன சாக்த தந்த்ர நூல்கள்.
“எங்களுக்கு ராஜ யோகம் !” என்றார்கள் முதிய தம்பதி..


