ஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்
(வனவாசமும் -குரு பார்வையும்)
(இரண்டு சம்பவங்களும்-பிரத்யட்ச குரு பெரியவாளும்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 9 & 10
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
சம்பவம்-1 ஜன்ம குரு
அன்றைய தினம் குருப் பெயர்ச்சி. ஒரு பக்தர் பெரியவாளிடம் வந்தார்.
“என் ஜாதகப்படி ஜன்ம ஸ்தானத்துக்கு.. குரு வந்திருக்கு. அதனால் ரொம்ப கஷ்டம் வருமாம்.ராமன் காட்டுக்குப் போனதற்குக் காரணம், ஜன்மத்தில் குரு வந்ததுதானாம். சாந்தி பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஜோஸ்யர் சொல்கிறார்!” என்றார், பெரியவாளிடம்.
பெரியவாள் சொன்னார்;
“அப்படி ஒரு பேச்சு இருக்கு. ராமர் காட்டுக்குப் போனது, ஜன்மத்திலே குரு வந்தபோதுதான்னு….. அதெல்லாம் சரியில்லை. ராமர் காட்டிலே சௌக்கியமா இருந்தார், தபஸ் பண்ணிண்டு….மகரிஷிகளோட சம்பாஷித்துக் கொண்டு…அவாளுக்குத் தரிசனம் கொடுத்துண்டு….”
பக்தர் தெளிவடைந்தார்.
சம்பவம்-2 பிரத்யட்ச குரு.
“இன்னும் குரு பார்வை வரவில்லை. அதனால் என் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லை” என்று பெரியவாளிடம் முறையிட்டுக் கொண்டார், ஓர் அன்பர்.பக்கத்தில், தேதியூர் வாஞ்சி அய்யர் என்ற ஸ்ரீமடத்தின் பிரிய சிஷ்யர் நின்று கொண்டிருந்தார்.
உடனே அவர், (வாஞ்சி அய்யர்), ” நீங்க சொல்றது தப்பு. குரு கடாக்ஷம் வந்து விட்டது. பிரத்யட்ச குருவான பெரியவா சந்நிதிக்கு வந்து விட்டீர்கள். இனிமேல் தடங்கல் இல்லை. சீக்கிரம் கல்யாணம் ஆகும்” என்று அன்புடன் சொன்னார். அப்போது ஆவணி மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகியிருந்தது. ஆவணி முடிவுக்குள் எப்படிக் கல்யாணம் நடக்கும்?
நடந்தது !
பெரியவாள் அனுக்ரஹ விசேஷம், வாஞ்சி அய்யர் வாக்கு எல்லாம் சேர்ந்து,இரண்டொரு நாளிலேயே விவாகம் நிச்சயமாகி பத்து நாளில் நடந்தே விட்டது.புதுமணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு, தரிசனத்துக்கு வந்த அன்பர், பெரியவாள் சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பரவசப் பட்டார்.


