
அரசவைக் கணக்கர்
வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்
வரவிடுப் போன்ம னதையும்,
மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்
வருகர தலாம லகமாய்
விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள
விடஎழு தவாசிக் கவும்
வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்
மேன்மைரா யசகா ரன்ஆம்;
கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்
கடிதேற் றிடக்கு றைக்கக்
கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்
காட்டுவோன் கருணீ கன்ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள
பெரியோனே!, அருமை தேவனே!, வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக்
கொண்டு, ஓலையை விட்டவன் உள்ளத்தையும், அவன் விரும்பிய தொழிலையும், இடத்தையும் காலத்தையும், உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசருடைய கருத்தில் உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், தேர்ச்சி பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க
எழுத்தாளன் ஆவான், ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு
விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை
மலை போலவும் மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.
கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல்,
என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.