சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலையில் என்றுமில்லாத வகையில் இந்த முறை கடும் பாதுகாப்பு. காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று கூறி, உச்ச நீதிமன்றம், இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக ஒரு போரைத் தொடுத்தது. இது பாரம்பரிய பண்பாட்டு நம்பிக்கைகளுக்கும் ஆங்கிலக் கல்வி கொடுத்த மேட்டுக்குடித்தனத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வருடம் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, எப்படியாவது பெண்களை சபரிமலைக்கு அனுப்பி விட வேண்டும் என்று பாடுபட்டு, பெண்களை அனுப்பியது. இதனால் ஏற்பட்ட கடுங்கொந்தளிப்பால் மாநிலம் அமைதி இழந்தது.
இதனால் சபரிமலையில் பக்தர்களைக் காட்டிலும் போலீஸாரே அதிக அளவில் குவிந்திருந்தனர். பக்தர்கள் வேடம் போட்டு போலீஸார் எங்கும் பரவியிருந்தனர். அவர்கள், பக்தர்கள் வேடம் போட்டு, பெண்களை அழைத்துச் செல்ல பாதுகாப்பாக நின்றனர்.
இந்நிலையில், மகர விளக்கு பூஜை இன்று நடைபெறவுள்ளது. இத்தனை நாட்களாக பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், மகர ஜோதி காண்பதற்காக பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.