“சங்கீதமும் சமையலும்” (வரகூர் முகாம்.)
(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !)
வேதபுரி சொன்னது,
சொன்னவர்;.வேதபுரி
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்….
(மறுபதிவு)
பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும். தானும் பாடுவா.
வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி கூப்பிட்டா. “நான் பாட்டுப் பாடட்டுமா? நீ கேட்கிறியா?”ன்னா, சரீன்னேன், உடனே, எனக்கு மட்டும் கேட்கிற குரலில்,
‘ கண்ணா, சந்த்ரமௌளீஸ்வரர் கிட்ட வேதபுரி…..வேதபுரி,,, இந்தக் கட்டைவிளக்கில் நாலு திரிபோட்டு, எண்ணெய் விட்டு, ஏத்தி வை, வேதபுரி.”.. அப்டீன்னு, சரளமா பாடினா.
விளக்கு ஏற்றி வை-ன்னு உத்தரவு போட்டிருக்கலாம். அப்படிச் செய்யல்லே.ரொம்ப நயமா,சொல்லிக்காட்டிட்டா!,
தினம் எல்லோரும் பஞ்சாங்கம் படிக்கணும். திதி,வார,நக்ஷத்ர, யோக,கரணம் தெரிஞ்சுக்கிறதினாலே, நெறைய பலன் உண்டு-ன்னு சொல்லுவா. தினம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்பா.
கொட்டகைக்குப் போனா, தையல் இலை மேலே கங்காஜலம் வைக்கணும், ஆசமனத்துக்காக.
எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா, பெரியவா ! (என்ன, அப்படிக் கண்ணை முழிச்சுப் பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப் போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே பெரியவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்)
“கூட்டு செய்யத் தெரியுமோ”ன்னு ஒரு நாள் கேட்டா. தெரியாதுன்னேன்.
“நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது..”
“ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு. கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு. நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை, தேங்கா அறைச்சு விடு. மொளகு சீரகம் போடு.
இப்படிப் பண்ணினா,கூட்டு மிச்சமே இருக்காது..”
பெரியவா சொன்னபடியே பண்ணுவேன். அப்போ, கூட இருந்த யதிதிகளும் சாப்பிடுவா. கூட்டு முழுக்க ஆயிடும்.
-எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !?


