“ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”–பெரியவா பக்தர்களிடம்.
(லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை
மற்றும் கட்டெறும்பு,காக்கை-உதாரணம் காட்டி)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவாள் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்.
எதிரே, ஒரு பெரிய மரம்.தடிமனான குரங்கு ஒன்று
வந்து மரத்தில் ஏறியது.பின், இருபது – முப்பது
குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து
மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில்
போடச் சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படிப் போட்டதோ
தெரியவில்லை! ஆனால், மற்றக் குரங்குகள்
ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு
மேலே ஏறிச் சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு
பழத்தைக் கூடத் தொடவில்லை.
பெரியவாள் சொன்னார்கள்;
“குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு
discipline இருக்கு!லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன
“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை
இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான்
மற்ற யானைகள் செல்லும்.
“ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற
கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.
“ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள்
மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.
“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”
கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள் ஒரே குரலாக,
“பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்”
என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.
“சரி,காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம்
இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள்,இருபத்துநாலு
மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன்.
“காலையில்,இரண்டு நிமிஷம் ‘ ராம,ராம’ என்று
சொல்லுங்கோ;சாயங்காலம்,’சிவ,சிவ’ன்னு சொல்லுங்கோ”
“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள்
தெரிவித்துக் கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த
தொண்டர்களிடம், “பத்துப் பனிரெண்டு பேர்களாவது
சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள்.
அந்த, யாரோ பத்துப் பனிரெண்டு புண்யாத்மாக்களை
உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன்,
அரைமணி லெக்சர்!
குரங்கு,காட்டு யானை,கட்டெறும்பு,காக்கை -நமக்கு
நல்ல வழிகாட்டிகள்;அவர்களை(அவைகளை)யாவது
follow பண்ணலாம்தானே?




