spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: அர்ஜுனன் வனத்தை எரித்தது!

திருப்புகழ் கதைகள்: அர்ஜுனன் வனத்தை எரித்தது!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 206
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்

சிந்துர கூரமருப்பு – பழநி

            அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஐம்பத்தைந்தாவது திருப்புகழ், ‘சிந்தூர கூரமருப்பு’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, மாதர் ஆசையை விலக்கி, திருவடியைத் தந்து அருள் புரிவாயாக”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி

     செங்கைகு லாவந டித்துத் தென்புற

          செண்பக மாலைமு டித்துப் பண்புள …… தெருவூடே

சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய

     லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்

          செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி …… விலைமாதர்

வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை

     யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட

          மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை …… தனிலேறி

மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட

     முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்

          மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத …… மருள்வாயே

இந்திர நீலவ னத்திற் செம்புவி

     யண்டக டாகம ளித்திட் டண்டர்க

          ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு …… ளொருபேடி

இன்கன தேரைந டத்திச் செங்குரு

     மண்டல நாடும ளித்துப் பஞ்சவ

          ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு …… மருகோனே

சந்திர சூரியர் திக்கெட் டும்புக

     ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய

          சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ……   குருநாதா

சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு

     கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர

          தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ……   பெருமாளே.

            இத்திருப்புகழின் பொருளாவது – இந்திரனுக்குச் சொந்தமான இருண்ட காண்டவ வனத்தை எரித்தும், செம்மையான பூலோக முதல் அண்ட கோளம் வரை இருந்த அவுணர்களை அழித்தும், தேவர்களது நினைவில் இருந்த துன்பத்தை துடைத்தும் உதவிய ஒப்பற்ற பேடி உருவங்கொண்ட அர்ச்சுனனுடைய இனிய தேரைச் செலுத்தி, செவ்விய குருநாட்டினைக் காப்பாற்றிப் பஞ்சபாண்டவர்க்கு நட்புப் பூண்ட தலைவராம் திருமாலின் திருமருகரே; சந்திரன் சூரியன் எண் திசைகள் எல்லாம் புகழுமாறு, இறுதியில்லாத பெருவாழ்வில் விளங்கும் சிவபெருமானுடைய திருச்செவியில் உபதேசித்த குருநாதரே; சிறந்த வள்ளி பிராட்டியின் இன்ப மிகுந்த தனபாரங்களைத் தழுவும் சமர்த்தரே; அழகரே; குளிர்ந்த தமிழ்மொழி வழங்கும் பழநி மலைமீது எழுந்தருளி உள்ள பெருமிதம் உடையவரே. எனக்கு மாதருடைய ஆசையை அகற்றித் தேவரீருடைய அழகிய திருவடியைத் தந்தருள்வீர் – என்பதாகும்.

            இத்திருப்புகழில் அருணகிரிநாதர் சில மகாபாரத நிகழ்வுகளைக் கூறுகிறார்.

இந்திர நீலவ னத்திற் செம்புவி

     யண்டக டாகம ளித்திட் டண்டர்க

          ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு …… ளொருபேடி

இன்கன தேரைந டத்திச் செங்குரு

     மண்டல நாடும ளித்துப் பஞ்சவ

          ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு …… மருகோனே

என்ற வரிகளில் காண்டவ வன தகனக் கதையும், அருச்சுனன் தேவர்களுக்காக அசுரர்களை அழித்த கதையும், மேலும் அவன் பேடியாகச் சாபம் பெற்ற கதையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பார்த்தனுக்கு தேர் ஓட்டிய கதையும் குறிப்பிடப்படுகிறது.

காண்டவ வனம்

            கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஒருநாள் யமுனை ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஆச்சா மரம் போல பெரிய பிராமணன் ஒருவன் வந்தான். அவன் உருக்கிவிட்ட தங்கம் போன்ற நிறத்தை உடையவனாக இருந்தான். அந்த பிராமணன் அவர்களை நெருங்கி வரும்போது அவன் அக்னியாக இருப்பானோ என்ற சந்தேகத்தில் கிருஷ்ணர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றார். பக்கத்தில் அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

            “கிருஷ்ணார்ஜுனர்களே, நான் பிராமணன். எப்போதும் அதிக போஜனம் செய்வேன். உங்களிடம் யாசகம் கேட்கிறேன். என் பசியைத் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டினான். “நீர் எவ்வகையான உணவு கொடுத்தால் திருப்தியடைவீர்? அதைத் தர முயற்சிக்கிறோம்” என்று அர்ஜுனன் சொன்னான். “எனக்கு அன்னம் வேண்டான். நான் அக்னி. எனக்கு வேண்டிய உணவை நீங்களே அளியுங்கள். இந்த காண்டவ வனமே எனக்கு ஏற்ற உணவு”

            இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “இந்த காண்டவ வனத்தை இந்திரன் காப்பாற்றுகிறான். இங்கே அவனது நண்பன் தக்ஷகன் வசிக்கிறான்” என்று அக்னி மேலும் சொன்னான். “நீதான் அக்னியாயிற்றே! எரிப்பதில் உனக்கென்ன சிரமம்?” என்று அனைத்தும் அறிந்த கிருஷ்ணன் கேட்டான். “நான் எரித்தால் தக்ஷனின் நண்பனாகிய இந்திரன் மழை பொழிந்து அழித்துவிடுகிறான். அதனால் எனக்குப் பிடித்த இந்தக் காட்டை என்னால் எரிக்க முடியவில்லை”

            “நீ ஏன் இந்தக் காட்டை எரிப்பதற்கு இவ்வளவு முயற்சி எடுக்கிறாய்?” என்று கேட்டான் அர்ஜுனன். அக்னி என்ன பதி சொன்னான்? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe