திருப்புகழ் கதைகள் பகுதி – 363
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருப்புகழ் படிப்பதன் பலன்
முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ் என்றாலும், அதில் மற்ற கடவுள்கள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர். 'திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்’னு சொல்வார்கள். என்னைக் கேட்டால், வாழ்க்கையே மணக்கும் எனச் சொல்வேன். எல்லா கடவுளர்களின் திருநாமங்களோடும் இயல்பா இணையற அழகு, முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு. விநாயகர் பேரோடு சேர்ந்து கணபதி சுப்ரமணியம், ஸ்ரீராமரோடு சேர்ந்து ராமசுப்ரமணியன், அப்பாவின் பேரோடு சேர்ந்து சிவசுப்ரமணியன், அம்மையுடன் சேர்ந்து சக்திவேலன், பெருமாளோடு இணைந்து வேங்கடசுப்ரமணியன், ஐயப்ப ஸ்வாமி யோடு சேர்ந்து ஹரிஹரசுப்ரமணியன், ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியோடு சேர்ந்து அனுமந்த குமார்னு முருகப்பெருமான் எல்லாக் கடவுளோடயும் இணைஞ்சிருக்கார்.
பிள்ளையார் பத்தி அருணகிரிநாதர்,
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வசைபரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே.
எனப் பாடியிருக்கார்.
திரிபுரமும் மதன் உடலும் நீறு கண்டவன் தருண
மழவிடயன் நடராஜன் எங்ஙணமும் நிகழ் அருணகிரி சொரூபன
சிவபெருமானைப் போற்றிப் பாடிப் பரவியிருக்கிறார்.
குமரி, காளி, வராஹி, மகேஸ்வரி,
கெளரி, மோடி, சுராரி, நிராபரி, கொடிய சூலி
என அம்பாள் பற்றியும் அவளுடைய திருக்கோலங்கள் பத்தியும் அடுக்கிக்கொண்டே போகிறார். இப்படி ஒவ்வொரு தெய்வத்தைப் பத்தியுமே திருப்புகழில் சிலாகித்துப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.
இதனால்தான், திருப்புகழ் மகா மந்திர பூஜையில் ஸ்ரீவிநாயகர், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்ப ஸ்வாமி, அனுமன் ஆகியோரின் படங்களையும், நடுநாயகமா முருகப்பெருமானோட படத்தையும் வைச்சு பூஜை செய்கிறோம். இப்படி ஏககாலத்தில் ஏழு தெய்வங்களை ஏகாந்தமா பூஜை செய்யும்போது கிடைக்கக்கூடிய பலன் பன்மடங்கு அதிகம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மலர், பழம், நைவேத்தியம் ஆகியவற்றைப் படைத்துப் பகிர்ந்து உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. கடன் தொல்லையால் தவிப்பவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்கள், மகனுக்கோ மகளுக்கோ இன்னும் திருமணமாகவில்லை என ஏங்குபவர்கள், சொந்தமா வீடு வாசல் அமையவில்லையே என அல்லாடுபவர்கள், பூர்வீகச் சொத்துப் பிரச்னைல சிக்கி, கோர்ட்டு கேஸ்னு அலைபவர்கள், இப்படி துக்கத்தோடயும் வேதனையோடயும் யார் இருந்தாலும், அவங்க ஒரேயொரு முறை இந்தத் திருப்புகழ் மகா மந்திர பூஜையைச் செய்தால் போதும். இல்லையெனில் அதில் கலந்து கொண்டால் போதும்; அவர்களின் பிரச்னை சீக்கிரமே திர்ர்ந்துவிடும். அவர்கள் நினைத்தது நிச்சயம் நடந்தே தீரும்.
மிகவும் வலிமையானது திருப்புகழ். அப்படிப்பட்ட திருப்புகழைக் கற்க, திருப்புகழைக் கேட்க, திருப்புகழை நித்தமும் ஜபிக்க, திருப்புகழ் பூஜையை அனுதினமும் அர்ச்சிக்க, முக்தி எளிதாகும்னு சொல்லுது திருப்புகழ் சிறப்புப் பாயிரம் பாடல். அந்தத் திருப்புகழை, மகா மந்திரத்தை ஜபித்து, பூஜித்து வணங்குவோம்; வளமுடன் வாழ்வோம்.
திருப்புகழின் பிரபாவம் பற்றிப் பாடுகின்ற “திருப்புகழ் பாயிரம்” திருப்புகழின் பெருமையை பின்வருமாறு பாடுகிறது.
மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலாயுதம் என்று, அசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலாயுதம் என்று, உரகனும் கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே.
அதாவது – மயில் வாகனப் பெருமாளின் திருப்புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, எல்லாவற்றையும் எரிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த வடவைத் தீயும், திருப்புகழ் தன்னைச் சுடுமோ என்று அச்சத்தால் நடுங்கும். திசைகளில் உள்ளோர் யாவரும் இது சூலாயுதம் தானோ என்று நடுக்கம் அடைவர். அசுரர்கள் இது வேலாயுதமே என்று பயந்து கடலில் சென்று ஒடுங்குவர். பாம்பரசனும் பயந்து பாதாள லோகத்தில் சென்று ஒளிவான்.
தருப்புகழ் வல்ல சுரர் மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்று எறிந்தோன்,
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே.
கற்பகம் முதலிய மரங்கள் நிறைந்துள்ள புகழ் பெற்ற தேவர்களுக்கு மகளாக வளர்ந்த தேவயானைக்கு நாயகன். எல்லாம் வல்ல முதற்பொருளாகிய சிவபெருமானுக்கே குருவாக அமைந்த குமாரக் கடவுள். ஆறு திருமுகங்களை உடையவன். கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கியவன். அவனுடைய புகழை, அருணகிரிநாதப் பெருமான் பாடி அமைத்த திருப்புகழ்ப் பாடல்களில் வல்லவர்களாகிய அடியவர்களின் பெருமைக்குரிய பாதங்களிலே படிந்து உள்ள பொடியானது எனது தலையில் பொருந்தட்டும்.
இறுதியாக, திருப்புகழைப் படித்தால், பாராயணம் செய்தால் எமனை வெல்லலாம் என்று பாடியுள்ளனர்.
திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் – திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ.
(கெர்ச்சிக்க லாமே கெடீ – எமனை வென்று கர்ஜிக்கலாம்)