
இன்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. காலையில் செப்பு தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலம் ஆகும்.இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஆண்டாளுக்கும் ரங்கமன்னார்க்கும் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது ஐதீகம்.
இந்த திருக்கல்யாணம் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை இரவு வேளைகளில் ஆண்டாள் ரங்கமன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நேற்று 11ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரங்க மன்னரும் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோபாலா கோவிந்தா என கோஷம் முழுங்கியவாறு ரதத்தினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து வந்து நிலையம் சேர்த்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு ஆண்டாள் அங்க மணிகளுடன் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கன்னியா லக்னத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அலங்கார பந்தலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் பிரபு என்ற வெங்கட்ராம பட்டாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிவில் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாத பாக்கெட் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
திருக்கல்யாணம் முடிவில் ஆண்டாள் ரங்கம்மன்னார்க்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் தீபாரதனை காட்டப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை அறங்காவலர்கள் வ. ராம்குமார் வரதராஜன் அ.உமாராணி த.நளாயினி தாயில்பட்டி வெ. மனோகரன் வெங்கடாசாமி விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.நாகராஜன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாட வீதிகள் வழியாக அவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆண்டாள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.