ஐ.பி.எல்-1 சென்னை கொல்கொத்தா
– K.V. பாலசுப்பிரமணியன் –
15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கின. இந்தப் போட்டிகளின் 55 ஆட்டங்கள் மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பார்போர்ன் மைதானம் மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானங்களில் நடக்கும். மீதமுள்ள 15 ஆட்டங்கள் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கும்.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை கொல்கொத்தா அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்கும் புதிய அணித்தலைவர்கள். டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், சென்னை அணியை மட்டையாடச் சொன்னார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (ரன் எடுக்காமல் அவுட்டானார்)
மற்றும் தேவோன் கான்வே (3 ரன்) சோபிக்கவில்லை. ராபின் உத்தப்பா 28 ரன்கள் அடித்தார். அம்பாடி ராயுடு ரவீந்த்ர ஜதேஜாவால் கேவலமான முறையில் ரன் அவுட்டானார். இப்படி 11ஆவது ஓவர் முடிவதற்குள் ஐந்து விக்கட் விழுந்துவிட்டது. தோனியின் புத்திசாலித்தனமான ஆட்டத்தால் அணி கடைசி ஆறு ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து 20 ஓவர் முடிவில் 131 ரன் எடுத்தது.
அடுத்து ஆடவந்த கொல்கொத்தா அணி பவர் ப்ளேயில் 43 ரன்கள் எடுத்தது. அவர்களின் ஸ்கோரிங் ரேட் சென்னை அணியின் ஸ்கோரிங் ரேட்டைவிட எப்போதும் அதிகமாக இருந்தது.
விளையாடிய அனைவரும் சரியாக விளையாடினார்கள். முடிவில் 18.3 ஓவரில் கொல்கொத்தா அணி சென்னை அணியை வெற்றிபெற்றது.