ஐபிஎல் 2022 – லக்னௌ vs குஜராத் – 28.03.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் புதிய அணிகளான லக்னௌ அணியும் குஜராத் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற குஜராத் அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா லக்னௌ அணியை மட்டையாடச் சொன்னார். லக்னௌ அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தலைவர் கே.எல். ராகுல் முதல் பந்தில் விக்கட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
முதல் ஐந்து ஓவருக்குள் விக்காட்டுகள் மட மடவென விழுந்தன. டி காக் (7 ரன்) மூன்றாவது ஓவரிலும், லிவிஸ் (10 ரன்) நான்காவது ஓவரிலும், மனீஷ் பாண்டே (6 ரன்) ஐந்தாவது ஓவரிலும் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் விளையாட வந்த தீபக் ஹூடாவும் (55 ரன், 61 பந்து, 6 ஃபோர், 2 சிக்ஸ்) ஆயுஷ் படோனியும் (54 ரன், 78 பந்து, 4 ஃபோர், 3 சிக்ஸ்) அனியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்கள். க்ருணால் பாண்டியா 21 ரன் அடித்தார்.
இறுதியில் லக்னௌ அணி ஆறு விக்கட் இழப்பிறகு 158 ரன் எடுத்தது. அடுத்து விளையாட வந்த குஜராத் அணியிலும் முதல் ஓவர், மூன்றாவது பந்தில் ஷுப்மன் கில் அவுட்டானார். மூன்றாவது ஓவரில் விஜய் ஷங்கர் அவுட்டானார்.
அதன் பின்னர் மேத்யூ வேட் (30 ரன்), ஹர்திக் பாண்ட்யா (33 ரன்), டேவிட் மில்லர் (30 ரன்) நன்றாக விளையாடி அணிக்கு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்ற அளவிற்கு கொண்டுவந்தார்கள். ஹர்திக்கின் விக்கட்டை க்ருணால் எடுத்தார்.
கடைசி ஐந்து ஓவரில் 68 ரன்கள் எடுத்தாக வேண்டிய ஒரு நிலை. ஆனால் ராகுல் திவேதியா பேட்டிங் செய்துகொண்டிருந்தார். இவர் இதற்கு முன்னரும் ஒரு முறை இதுபோன்ற ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தவர். இம்முறையும் அவர் 24 பந்துகளில் 40 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.