ஆழ்துளை கிணறை மூட வலியுறுத்தி தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்த இளைஞரை வைடா போனை ராஸ்கல் என அநாகரிகமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை மூட கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் என்பவருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார் செம்பிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர்.
அப்போது ஆட்சியர் ‘உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் பகுதியில் உள்ள பிடிஓ அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.
இளைஞர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை என்று பதில் கூறினார்.
மேலும் ஆத்திரமடைந்த ஆட்சியர், ‘உங்களுக்கு கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா? என கேட்டுள்ளார் மேலும் ஆட்சியர் மிகவும் டென்ஷனாகி ஆட்சியர் என்றால் நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் வர முடியுமா எனக் கூறியதோடு ‘போனை வை ராஸ்கல் எனக் கூறி உள்ளார்.
ஆட்சியருடன் நடந்த உரையாடலை அந்த இளைஞர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதன் ஆடியோ பதிவு செய்தி ஊடகங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு பேசும்பொருளாகி உள்ளது.
அக்கறையுள்ள குடிமகனாக இருந்ததால் தான் அந்த இளைஞர் தொலைப்பேசியில் அணுகியுள்ளார்.
அக்கறை இருந்தா நேரில் வந்து சொல்லு ராஸ்கல் என்பன போன்ற வார்த்தைகள் உயர்ந்த படிப்பு படித்தவர்கள் பேசுவது அழகானதல்ல என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதற்கான ஒரு பதவியாகவே கலெக்டர் பதவி பார்க்கபடுகிறது.
அவ்வாறு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய, செய்யவேண்டிய ஆட்சியர் இவ்வாறு வைடா போனை ராஸ்கல் என பொறுப்பை தட்டி கழிப்பதுடன் பொறுப்புணர்ந்து செயல்பட்ட ஒரு குடிமகனை திட்டியது அதிர்ச்சியை அளிக்கிறது.