
சபரி மலை ஐயப்பன் கோயில் சீசனுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பாஜக சிவகாசி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.ஆறுமுகசாமி, மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்
அவா் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..
வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவார்கள்.
இந்நிலையில் சென்னையிருந்து கொல்லம் வரை ஒரு விரைவு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இரு மார்க்கத்திலும் இந்த ரயில் பக்தா்களுக்கு போதுமானதாக இருக்காது. எனவே சென்னை-கொல்லம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

விருதுநகா், சிவகாசி வழியே கொல்லத்திற்கு பாசஞ்சா் ரயில் இயக்க வேண்டும். தற்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு பாசிஞ்சா் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினசரி இரவு மதுரை வந்தடைந்து விடுகிறது.
இந்த ரயிலை மதுரையுடன் நின்று விடாமல் விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, அரியங்காவு என கொல்லம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஏழை எளிய பக்தர்கள் பயன் பெறுவார்கள்.
செங்கோட்டை-கோயம்புத்தூர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. அந்த ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியோதா ரயில், தாம்பரம்-செங்கோட்டை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இயக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக இந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியுள்ளார்.