உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு. விவசாயி. இவரது மகள் தேவிபிரியா (19), திருப்புலிவனத்தில் உள்ள அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டில், எந்த வேலையும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய தேவிபிரியாவை, பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த தேவிபிரியா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, தேவிபிரியாவை மீட்டு மானாம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி தேவிபிரியா உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.