கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கொலை செய்யப்பட்டதிலிருந்து அப்பகுதியில் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் துப்பாக்கி புழக்கம் அதிகமாக இருப்பதால் காவலர்கள் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
களியக்காவிளை அருகே கேரள பகுதியான அமரவிளை சோதனைச் சாவடியில் இன்று வழக்கம் போல கேரள மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த வழியே நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த பேருந்தை வழி மறித்த காவல்துறையினர் அதில் ஏறி, அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர்.
அப்போது பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பையில் துப்பாக்கி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அந்த துப்பாக்கியிலிருந்த தோட்டாக்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.