காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சோதனை செய்ய 300 ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில் 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமானவர்களை பரிசோதனை செய்ய 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.